சிறந்த கல்விமான் ஆகவேண்டும் என்ற தமது கனவுகள் குடும்ப சூழ்நிலையால் சற்று பின்தங்கியபோதும், அவற்றை நியூஜென் அமைப்பு மீண்டும் தூண்டியதாக உணர்ந்தார் டேவிட் (உண்மைப் பெயரன்று).
திருந்திய குற்றவாளிகளின் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் கைகொடுக்கிறது நியூஜென் அமைப்பு. அதன் திட்டங்களின் பயனாளர்களாக இருந்து வருகின்றனர், 14 வயது டேவிட்டும் அவரின் அக்கா கிரேஸும் (உண்மைப் பெயரன்று).
கடந்த சனிக்கிழமை (ஜனவரி 20) நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்தேறிய நியூஜென் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் டேவிட் உட்பட 454 மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலான அம்மாணவர்களுக்கு மொத்தம் $130,000க்கும் மேற்பட்ட தொகையை வழங்கியது நியூஜென். 2011 முதல் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஆக அதிக பயனாளிகளைக் கண்டது.
பெட்ரோல் நிலையத்தில் மாறுநேர வேலையில் தந்தை, மலேசியாவில் பணிபுரிந்ததால் மாதந்தோறும் மட்டுமே வந்து சென்ற தாயார் என சகோதரர்கள் இருவரும் கடந்த ஐந்தாண்டுகளாக சிரமப்பட்டனர்.
இருந்தும், அக்காவின் வழிகாட்டுதலாலும், தமது கடும் உழைப்பினாலும் ஈராண்டுகளுக்கு முன்னர் தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார் டேவிட். குறிப்பாக, தமிழ்ப் பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்று, பள்ளியால் அவர் அங்கீரிக்கப்பட்டார்.
பாடங்களில் பின்தங்கி இருந்ததால் வாரநாள்களில் நாள்தோறும் 12 மணி நேரத்துக்கும் மேலாக படிக்கவேண்டிய சூழல் இருந்ததை நினைவுகூர்ந்தார் டேவிட்.
சாதாரண நிலைத் தேர்வு முடித்து தற்போது பகுதிநேர வேலை தேடிக்கொண்டிருக்கும் 20 வயது கிரேஸுக்கு வீட்டையும் தம்பியையும் பெரும்பாலான நேரங்களில் பராமரிக்கவேண்டிய சூழல். எனவே, டேவிட்டின் கல்வித் தேர்ச்சி தங்களின் குடும்பத்துக்கு பெரிய மைல்கல்லாக விளங்குகிறது என கூறினார் டேவிட்டின் தாயார்.
“எத்தனை சவால்கள் இருந்தாலும், தானாகவும் நம்பிக்கையோடும் செயல்படுவது டேவிட்டின் இயல்பு. கல்வியில் அவனுக்கு ஆர்வம் அதிகம். எங்களின் கனவுகளை நிறைவேற்றும் அதே வேளையில், ஒரு குடும்பமாக இன்னும் நெருக்கமாகி உள்ளோம்,” என்றார் கிரேஸ்.
நிதி உதவி செய்வதுடன், சமூக, குடும்ப ஒற்றுமை நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கிறது நியூஜென். அத்தகைய நிகழ்வுகளில் பலவற்றில் கலந்துகொண்டுள்ள இருவரும் தாங்கள் நல்ல சமூகப் பிணைப்புகளையும் நட்புறவுகளையும் உருவாக்கிக் கொண்டதைக் குறிப்பிட்டனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடியா அஹமது சம்டின், குற்றம் புரிந்தோரின் குடும்பங்களைக் கரையேற்ற விழையும் நியூஜென்னின் தொடர் முயற்சிகளைப் பாராட்டினார்.
கூடுதலான குடும்பங்களை அணுகி நல்லுறவுகள் கொண்டு உதவும் நோக்கில் நியூஜென், இவ்வாண்டு மேற்கொண்டுள்ள திட்டத்தை அவர் குறிப்பிட்டார். ‘ஃபேமிலி பிஃப்ரெண்டர்ஸ்’ எனும் இத்திட்டத்தால் குடும்பத்தார் இன்னும் எளிதாக தங்களின் கவலைகளைப் பகிர்ந்துகொண்டு உதவி நாடலாம் என நியூஜென் நம்புகிறது.