பண்டார் ஸ்ரீ பகவான்: சிங்கப்பூருக்கும் புருணைக்கும் இடையே மிகவும் நெருங்கிய, வலுவான உறவு இருப்பதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
இது இருநாட்டு அரசாங்கங்களுக்கும் மக்களுக்கும் பொருந்தும் என்றார் அவர்.
அதிபர் தர்மன் சண்முகரத்னம் புருணைக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து ஜனவரி 26ஆம் தேதி வரை அவர் அங்கு இருப்பார்.
அதிபராகப் பதவி ஏற்ற பிறகு இதுவே அவரது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணமாகும்.
அவருடன் அவரது மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகி சண்முகரத்னமும் சென்றுள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 25ஆம் தேதியன்று அதிபர் தர்மனைக் கௌரவிக்கும் வகையில் நூருல் இமான் அரண்மனையில் அரச உபசரிப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவை புருணை அரசர் ஹசனல் போல்கியோவும் அவரது மனைவி அரசியார் ஹாஜா சலேஹாவும் ஏற்று நடத்தினர்.
அதில் கலந்துகொண்டு பேசிய அதிபர் தர்மன், கடந்த 40 ஆண்டுகளில் சிங்கப்பூர்-புருணை உறவு எவ்வாறு மேம்பட்டுள்ளது என்பது குறித்து விவரித்தார்.
இருநாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு, நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் போன்றவை நெருங்கிய உறவுக்கான சான்று என்று அதிபர் தர்மன் கூறினார்.
மேலும் பல புதிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.
சிங்கப்பூர்-புருணை இடையிலான நட்புறவுக்கு மிக வலுவான அடித்தளத்தை அரசர் ஹசனல் போல்கியாவின் தந்தையான காலஞ்சென்ற ஸ்ரீ பகவான் சுல்தான் உமர் அலி சைஃபுதீனும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவும் அமைத்ததை அதிபர் தர்மன் சுட்டினார்.
அவர்கள் அமைத்த அடித்தளத்துக்கு மேலும் வலுசேர்க்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் மற்றும் புருணையின் எதிர்காலத் தலைமுறையினர் ஒருவரையொருவர் நம்ப வேண்டும் என்றும் அது மிகவும் முக்கியம் என்றும் அதிபர் தர்மன் வலியுறுத்தினார்.