சிங்கப்பூரின் ரத்த வங்கிகளில் ஓ+, ஓ- பிரிவு ரத்தம் மிகக் குறைந்த அளவில் இருப்பதாகவும் தகுதியுள்ளோர் அந்த ரத்தத்தைத் தானமாக வழங்குமாறு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் கேட்டுக்கொண்டுள்ளன.
சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது ரத்த சேகரிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, ஜனவரி 25ஆம் தேதி நிலவரப்படி, இருப்பில் உள்ள ஓ+, ஓ- பிரிவு ரத்த வகைகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.
போதுமான ‘ஓ’ பிரிவு ரத்தம் இல்லாவிடில் சில அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும் சூழல் ஏற்படக்கூடும் என்றும் உயிரைக் காப்பாற்ற ரத்தம் செலுத்த முடியாமல் போய்விடும் என்றும் சுகாதார அறிவியல் ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது.
சிங்கப்பூரில் உள்ள நோயாளிகளில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் ‘ஓ’ பிரிவு ரத்தம் கொண்டவர்கள். அந்த வகை ரத்தத்தை மட்டுமே அவர்களுக்குச் செலுத்த முடியும் .