தர்மன்: அதிபராக மேலும் செவ்வனே கடமையாற்ற உலகளாவிய நியமனங்கள் உதவுகின்றன

தர்மன்: அதிபராக மேலும் செவ்வனே கடமையாற்ற உலகளாவிய நியமனங்கள் உதவுகின்றன

2 mins read
a85e03df-82b7-4900-ab1b-3f27c5f999af
ஜனவரி 26ஆம் தேதியன்று புருணையில் உள்ள தாமான் மகோத்தா ஜுப்லி மாஸ் ஆற்றங்கரைப் பூங்காவில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் புருணை அரசர் ஹசனல் போல்க்கியாவுடன் (வலது) அதிபர் தர்மன் சண்முகரத்னம் கலந்துகொண்டார். - படம்: சாவ்பாவ்

தனிப்பட்ட முறையில் தமக்கு அளிக்கப்பட்ட பதவிகள் உட்பட தாம் வகிக்கும் அனைத்துப் பதவிகளும் நாட்டின் அதிபர் என்கிற முறையில் மிகச் சிறப்பாகக் கடமையாற்ற உதவும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் தேசிய நலனுக்கும் இவை நன்மை பயக்கும் என்றார் அவர்.

உலகப் பொருளியல் கருத்தரங்கின் அறங்காவலர் சபையின் உறுப்பினராகவும் நீர்ப் பாதுகாப்பு முறையை உருமாற்றம் செய்ய இலக்கு கொண்டுள்ள நீர் பாதுகாப்புக்கான உலகளாவிய ஆணையத்தின் இணைத் தலைவராகவும் திரு தர்மன் பதவி வகிக்கிறார்.

தேசிய நலனுக்கு நன்மை அளிக்கும் பட்சத்தில், அதிபரும் அமைச்சர்களும் தனிப்பட்ட முறையில் அனைத்துலக நியமனங்களை ஏற்க வழிவகுக்கும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மாற்றத்தால் அதிபர் தர்மனின் பணியில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அதிபர் தர்மன், முன்பு இருந்த நிலையைவிட தற்போது மாற்றங்கள் அதிகம் இல்லை என்று கூறினார்.

“நான் செய்பவை அனைத்தும் சுயலாபத்துக்கானதல்ல,” என்று புருணைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட அதிபர் தர்மன் ஜனவரி 26ஆம் தேதியன்று அங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மாற்றம் கொண்டுவரப்பட்ட பிறகு அதுபற்றி அதிபர் தர்மன் கருத்துரைத்திருப்பது இதுவே முதல்முறை.

“ அரசியலமைப்புச் சட்டத்தில் ‘தனிப்பட்ட முறையில்’ என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அனைத்துலக அளவில் சில பதவிகளை ஏற்று என் சொந்த கருத்துகளை வெளிப்படுத்த முடியும். அப்போதுதான் பல்வேறு அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும்போது நம்பகரமானவராகச் செயல்பட முடியும்.

“சிங்கப்பூரின் அதிபராக செவ்வனே கடமையாற்ற இது உதவும். அதுமட்டுமல்லாது, தேசிய நலனுக்குப் பலன் அளிக்கும் வகையில் அமையும். இதை அடிப்படையாகக் கொண்டு நான் எந்த அமைப்பில் சேர்ந்து பங்களிக்க வேண்டும் என்பதை அமைச்சரவை முடிவெடுக்கிறது. இதுவரை இந்தத் திட்டம் நல்ல பலன் அளித்து வருகிறது,” என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டதிலிருந்து அதிபர் தர்மன் நியூயார்க்கிற்கும் சுவிட்சர்லாந்துக்கும் பணி நிமித்தமான பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்