ரெட்ஹில், கிளமெண்டி எம்ஆர்டி நிலையங்களிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் புதிய வீடுகள் கட்டப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரெட்ஹில், கிளமெண்டி வட்டாரங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நிலப்பகுதியை நகர மறுசீரமைப்பு ஆணையம் ஜனவரி 26ஆம் தேதியன்று தயார் செய்தது.
ஆணையத்தின் 2019ஆம் ஆண்டு பெருந்திட்டத்தில் சில திருத்தங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கிரசெண்ட் பெண்கள் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் தங்ளின் சாலையில் அமைந்துள்ள 1.5 ஹெக்டர் நிலத்தின் பயன்பாட்டை அது மாற்றி அமைத்துள்ளது.
அந்த நிலப்பகுதியை குடியியல், சமூகப் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அது தற்போது குடியிருப்புப் பகுதிக்கான நிலப்பகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கிளமெண்டி கிளோஸ் வட்டாரத்திலும் குடியிருப்புக்கான நிலப்பகுதியின் அளவை ஆணையம் அதிகரித்துள்ளது.
குடியிருப்புக்காக அங்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதியை அது 4.3 ஹெக்டரிலிருந்து 5 ஹெக்டருக்கு உயர்த்தியுள்ளது.
இரு நிலப்பகுதிகளும் ஏறத்தாழ இரண்டு காற்பந்துத் திடலின் பரப்பளவுக்குச் சமம்.
தங்ளின் சாலையில் உள்ள நிலப்பகுதி அதிக குடியிருப்பாளர்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புப் பகுதியாகப் பயன்படுத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. வர்த்தக, சமூக வசதிகளுடன் அந்தக் குடியிருப்புப் பகுதி அமையும் என்று அது கூறியது.
குடியிருப்பாளர்களுக்கு வசதியாக ரெட்ஹில் எம்ஆர்டி நிலையம் அருகில் உள்ளது என்றும் பொழுதுபோக்கு அம்சமாக, நேரத்தை இனிதே செலவழிக்க அருகில் உள்ள அலெக்சாண்டிரா கால்வாய் இருக்கிறது என்றும் ஆணையம் தெரிவித்தது.
புதிய குடியிருப்புப் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் ரெட்ஹில் எம்ஆர்டி நிலையம் உள்ளது.
அந்தக் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் தனியார் குடியிருப்புகளும் புருணைத் தூதரகமும் உள்ளது.
குடியிருப்புப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பகுதிக்கு அருகில் உயர்தர தரைவீடுகளும் கூட்டுரிமை வீடுகளும் இருப்பதால் அங்கு தனியார் வீடுகளைக் கட்டலாம் என்று ஆரஞ்சுடீ சொத்து முகவையின் தலைமை ஆய்வாளரும் உத்தியாளருமான திருவாட்டி கிறிஸ்டின் சன் கூறினார்.
அங்கு கிட்டத்தட்ட 700லிருந்து 750 வீடுகளைக் கட்டலாம் என்றார் அவர்.
கிளமெண்டி கிளோஸ் வட்டாரத்தில் உள்ள நிலப்பகுதியில் ‘செர்ஸ்’ திட்டத்தின்கீழ் காலி செய்யப்பட்ட நிலப்பகுதியும் அடங்கும்.
அந்த இடத்தில் மேலும் பல வீடுகளைக் கட்டித் தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
இதன்மூலம் வீடுகளுக்கான தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன் பொதுப் போக்குவரத்து நிலையங்கள், ஏனைய வசதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ள வட்டாரத்தில் மேலும் பல குடியிருப்பாளர்கள் வசிப்பர் என்று ஆணையம் தெரிவித்தது.