சாலையில் கவனமின்றி காரை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியருக்கு திங்கட்கிழமை அன்று (ஜனவரி 29) அபராதம் விதிக்கப்பட்டது. அந்த விபத்தில் வயதான மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கு, விலா எலும்பு முறிவு உட்பட படுகாயம் ஏற்பட்டது.
விபத்து நிகழ்ந்தபோது சிஎச்ஐஜே செயின்ட் நிக்கலஸ் பெண்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய டேவிட் சாங் ஹாவோ, 45, மற்ற சாலைப் பயன்பாட்டாளர்களை கருத்தில் கொள்ளாமல் காயம் விளைவித்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து அவருக்கு $2,300 அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்த 15 மாதங்களுக்கு அனைத்துவிதமான வாகனங்கள் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
2022 பிப்ரவரி 24ஆம் தேதி காலை 6.45 மணியளவில் லோரோங் 1 தோ பாயோவிலிருந்து லோரோங் 6 பாதையில் வலதுபக்கமாகத் திரும்பும்போது மற்றவர்களைக் கவனிக்க அவர் தவறிவிட்டார். அப்போது முதியவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் பாதையில் அவரது கார் நுழைந்து மோதியது. இதில் காயம் அடைந்த 75 வயது மோட்டார்சைக்கிள் ஓட்டியை சாங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தார். மோட்டார்சைக்கிள் ஓட்டிக்கு மூன்று நாள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இதற்கிடையே ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளேடு கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கல்வி அமைச்சு, ஊழியர்களின் தவறான நடத்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், ஒழுங்கீனமாக நடந்துகொள்வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

