‘ஆபத்தான குற்றவாளிகளை காலவரம்பின்றி தடுத்து வைப்பதைநீதிமன்றங்கள் முடிவு செய்யும்’

‘ஆபத்தான குற்றவாளிகளை காலவரம்பின்றி தடுத்து வைப்பதைநீதிமன்றங்கள் முடிவு செய்யும்’

2 mins read
55f1cf43-9695-4ff8-9289-7f2c04b7d405
புதிய முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்புள்ளது என்று அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடுமையான பாலியல் அல்லது வன்முறைக் குற்றங்களில் ஈடுபடுவோரை காலவரம்பின்றி தடுத்து வைக்க உதவும் புதிய முன்மொழியப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து நீதிமன்றங்கள்தான் முடிவு செய்யும், அரசாங்கம் அல்ல என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

“சிறையில் தொடர்ந்து அடைக்கப்படுவதற்கான காலத்தை தடுப்புக் காவல் மறுஆய்வு வாரியம் முடிவு செய்யும். அத்தகைய குற்றவாளிகள் விடுவிப்பதற்கு ஏற்றவர்களா என்பதை அதுவே நிர்ணயிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.

அமைச்சர் சண்முகம் திங்கட்கிழமை (ஜனவரி 22) அன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது மேம்பட்ட பொதுப் பாதுகாப்புக்கான உத்தேச தண்டனைச் சட்டம் (செப்) குறித்து அவர் விளக்கமளித்தார்.

“இந்தச் சட்டத்தின்கீழ் தண்டனை விதிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறித்து சில தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது,” என்றார் அவர்.

“ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு அவருக்கு சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமா அல்லது ‘செப்’ சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும். அதனால் நீதிமன்றத்தின் முழுமையான விருப்பத்தில் தண்டனை அமைகிறது.

“குற்றவாளி ‘செப்’ வழக்குக்கு ஏற்றவர் என்பதை நீதிமன்றம் முடிவு செய்தால் அவர் குறைந்தபட்ச காலம் சிறைத் தண்டனையைப் பெறுவார். தண்டனைக் காலம் முடியும்போது அவரை நிபுணர்கள் மதிப்பிடுவார்கள்.

“தடுப்புக் காவல் மறுஆய்வு வாரியம் என்பது மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்களை உள்ளடக்கியது. அந்த சமயத்தில் குற்றவாளிகள் சமூகத்திற்கு எந்த அளவுக்கு ஆபத்தாக இருப்பார்கள் என்பதைப் பொறுத்து தண்டனை முடிவு செய்யப்படும்.

“குற்றவாளிகள் தன்னைப் பிரநிதிநித்து தானே எழுதி விண்ணப்பிக்கலாம். குடும்ப உறுப்பினர் அல்லது வழக்கறிஞர் வாயிலாகவும் எழுதிக் கேட்கலாம்.

“இதனை அமைச்சர் மதிப்பாய்வு செய்வார். இனி குற்றவாளி சமூகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லையென்றால் அவர் விடுவிக்கப்படலாம். ஆனால் சமூகத்திற்கு ஆபத்தாக இருந்தால் அந்தக் குற்றவாளி தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். பின்னர் ஆண்டுதோறும் மறு ஆய்வு செய்யப்படும்,” என்று அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார்.

குற்றவியல் நடைமுறை (இதர திருத்தங்கள்) மசோதாவின் ஒரு பகுதியாக ஜனவரி 10 அன்று நாடாளுமன்றத்தில் ‘செப்’ அறிமுகம் செய்யப்பட்டது.

இது, சமூகத்திற்கு ஆபத்தாக இருக்கும் குற்றவாளிகளை தண்டனைக் காலம் முடிந்து தானாக விடுவிக்கப்படுவதைத் தடுக்கிறது. குறிப்பாக, குற்றவாளி மீண்டும் குற்றம் புரிபவராக இருந்தால் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதற்கு புதிய முன்மொழியப்பட்ட சட்டம் வகை செய்கிறது.

குறிப்புச் சொற்கள்
புதிய சட்டம்