சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஆட்குறைப்பு இரட்டிப்படைந்தது.
ஒட்டுமொத்த அடிப்படையில் வேலையின்மை விகிதம் சற்று குறைந்தபோதிலும் கடந்த ஆண்டில் 14,320 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு முழுவதிலும் ஒட்டுமொத்த வேலை வாய்ப்பு வளர்ச்சி மெதுவடைந்தது.
இதற்குப் பலவீனமான பொருளியல் நிலை காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், வெளிநாட்டவர்கள் ஆகிய அனைவருக்கும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மெதுவடைந்ததாக மனிதவள அமைச்சு ஜனவரி 31ஆம் தேதியன்று வெளியிட்ட ஆரம்பகட்ட முன்னுரைப்புகள் தெரிவிக்கின்றன.
காலாண்டு அடிப்படையில், வேலை வாய்ப்பு தொடர்ந்து ஒன்பது மாதங்களாக வளர்ச்சி கண்டது.
கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் அது 8,400ஆக அதிகரித்தது.
வர்த்தகச் செயல்முறைகள் மாற்றியமைக்கப்பட்டதும் மறுசீரமைக்கப்பட்டதும் கடந்த ஆண்டின் ஆட்குறைப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
மொத்த வியாபாரங்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள், மின்னணுவியல் உற்பத்தி ஆகிய துறைகள் மீது உலகளாவிய பொருளியல் நிலை ஏற்படுத்திய தாக்கத்தால் இந்நிலை ஏற்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,200ஆகக் குறைந்தது.
மூன்றாவது காலாண்டில் 4,110 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருந்தனர். அப்போது மொத்த வியாபாரத் துறையைச் சேர்ந்த பல ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
“மின்னணுவியல் உற்பத்தித்துறையில் ஆட்குறைப்பு எண்ணிக்கை அதிகரித்தபோதும், மற்ற துறைகளில் ஆட்குறைப்பு எண்ணிக்கை பெரும்பாலும் சீராக இருந்தது அல்லது குறைந்தது,” என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.