கைதியிடமிருந்து $406 திருடியதை ஒப்புக்கொண்ட மூத்த சிறை அதிகாரி

கைதியிடமிருந்து $406 திருடியதை ஒப்புக்கொண்ட மூத்த சிறை அதிகாரி

1 mins read
56f4cb64-4ca8-49c6-b746-dad3c015f572
தண்டனைக் கால முடிவில் கைதிகளுக்குக் கல்வி, பயிற்சி வழங்கும் செலராங் பார்க் வளாகத்திலுள்ள எஸ்2 கழகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செலராங் பார்க் வளாகம் எனப்படும் சிறைக்கைதிகளின் மறுவாழ்வுக்கான நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கைதி ஒருவரிடமிருந்து நவம்பர் 2022ல் $406 திருடியதை மூத்த சிறை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தான் பிடிபடாமலிருக்கப் பல்வேறு நடவடிக்கை எடுத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

முகமது ரஹாடியான் முகமது காசிம், 49, நம்பிக்கை துரோகம், நீதித்துறை தன் கடமையைச் செய்வதற்கு இடையூறு விளைவித்தது ஆகிய குற்றங்களைச் செய்ததாக பிப்ரவரி 1ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

பிப்ரவரி 16ஆம் தேதி அவருக்குத் தண்டனை விதிக்கப்படும்போது, காவல்துறை அதிகாரியிடம் தவறான தகவல் தந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்படும்.

தலைமை வார்டன் 2 எனும் பதவியை வகித்த ரஹாடியான், செலராங் பார்க் வளாகத்தின் செயல்பாடுகளையும் கைதிகள் விடுவிக்கப்படுவது தொடர்பான நடவடிக்கைகளையும் நிர்வகித்து வந்தார்.

2022 நவம்பர் 18ஆம் தேதி அவரிடம் அன்றைய தினம் விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளிடம் திருப்பித் தருவதற்கான 10 பணப் பொட்டலங்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அவற்றிலிருந்து $406 அடங்கிய பொட்டலத்தை ரஹாடியான் மறைத்துக்கொண்டார். பின்னர் நசருதீன் எனும் கைதியை அறைக்குள் அழைத்தார்.

சிறை சென்றபோது நசருதீனிடம் $3,306 ரொக்கம் இருந்தது. ஆனால் ரஹாடியான் அவரிடம் $2,900ஐ மட்டுமே ஒப்படைத்தார். பின்னர் தான் பிடிபடாமலிருக்க காற்சட்டையில் அந்தப் பணத்தை வைத்து அதை துணி துவைக்கும் இயந்திரத்திலும் உலர்த்தும் இயந்திரத்திலும் போட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்