சுவீடன் நாட்டைச் சேர்ந்த ‘எலக்ட்ரோலக்ஸ்’ நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை வரும் மே மாதம் மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஏறக்குறைய 200 ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நிறுவனத்தில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என்றும் சிலர் மட்டும் வேறு நாடுகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தலைமை அலுவலகத்தை மூடுவது குறித்து ஊழியர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதியன்று தகவல் தெரிவிக்கப்பட்டதாக ‘எலக்ட்ரோலக்ஸ்’ தரப்பு கூறியது.
ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு-ஆப்ரிக்கா தலைமைத்துவ ஊழியர்களை பேங்காக்கிற்கு மாற்றவுள்ளதாகவும் ‘எலக்ட்ரோலக்ஸ்’ கூறியது.
ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அது தெரிவித்தது.
‘எலக்ட்ரோலக்ஸ்’ நிறுவனம் வீட்டிற்குத் தேவையான மின்கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
உலக அளவில் அந்நிறுவனத்தில் 40,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் அந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.