பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்த பிறகு சிங்கப்பூரில் ‘ஓ+’ ரத்த வகை சேமிப்பு 230 விழுக்காடு கூடியிருக்கிறது.
ஆனால் சீனப் புத்தாண்டுக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து ரத்த நன்கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களிலும் நீண்ட வாரயிறுதி நாள்களிலும் ரத்த இருப்பு இருபது விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளது என்று பிப்ரவரி 4ஆம் தேதி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.
“தற்போதைய ரத்த நன்கொடையின் வேகம் நீடிக்கவில்லை என்றால், குறிப்பாக சந்திரப் புத்தாண்டைத் தொடர்ந்து முதல் இரண்டு வாரங்களில் ‘ஓ’ வகை ரத்த இருப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
சுகாதார அறிவியல் ஆணையத்தின் தலைமை நிர்வாகியான மிமி சூங் மே லிங், சீனப் புத்தாண்டுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து ரத்த தானம் செய்ய பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
ஜனவரி 25ஆம் தேதி விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று பதிலளித்த 5,300 நன்கொடையாளர்களுக்கு ஆணையமும் சங்கமும் நன்றி தெரிவித்துக் கொண்டன.
தேசிய ரத்த இருப்பில் ‘ஓ+’ மற்றும் ‘ஓ-’ ரத்த வகை வெகுவாகக் குறைந்ததை அடுத்து ரத்த நன்கொடைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.