சிங்கப்பூரில் லசாடா நிறுவனத்தால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் தொழிற்சங்கத்துக்கும் லசாடா நிறுவனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்குறைப்பு விவகாரம் குறித்து சுமுகமான தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் வழங்கப்படும் தொகுப்புத் திட்டம், தகுதிபெறும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் லசாடா, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி), உணவு, பாண, ஒப்பந்தமுறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து பிப்ரவரி 4ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டன.
பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு, வேலை நியமன ஆற்றல் ஆதரவு வழங்க உணவு, பாண, ஒப்பந்தமுறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்துக்குப் பயிற்சி நிதியை லசாடா வழங்குகிறது.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் தொகை தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஒவ்வோர் ஆண்டுச் சேவைக்கும் இரண்டு வாரச் சம்பளம் வழங்கப்பட்டதாக கடந்த ஜனவரி மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்திருந்தது.
ஆட்குறைப்பு குறித்து உணவு, பாண, ஒப்பந்தமுறை ஊழியர்களுக்கான தொழிற்சங்கத்துக்கும் லசாடாவுக்கும் இடையே நிலவிய கருத்துப் பிணக்கத்துக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிப்ரவரி 4ஆம் தேதியன்று பதிவிட்டார்.