4,420 சிகரெட் பெட்டிகளுக்கான சுங்க வரி மற்றும் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தாத குற்றத்துக்காக இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் ஜனவரி 31ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு 21 மற்றும் 24 வயது.
செலுத்தப்படாத சுங்க வரி, ஜிஎஸ்டி வரி இரண்டுக்குமான மொத்த தொகை $542,959 என்று சிங்கப்பூர் சுங்கத்துறை பிப்ரவரி 7ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.
அந்த இரண்டு ஆடவர்களும் இரு வெவ்வேறு அதிரடிச் சோதனைகளின்போது பிடிபட்டனர்.
முதல் அதிரடிச் சோதனை ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 74ல் உள்ள அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்டது.
அங்கு அந்த 21 வயது ஆடவர் வேன் ஒன்றை நோக்கி நடந்து செல்வதை அதிகாரிகள் கண்டனர்.
அந்த வேனைச் சோதனையிட்டபோது அதில் வரி செலுத்தப்படாத 2,680 சிகரெட் பெட்டிகள் இருந்தன. சிகரெட்டுகளையும் வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மற்றோர் அதிரடிச் சோதனை புக்கிட் பாத்தோக் ஸ்திரீட் 31ல் உள்ள திறந்தவெளி வாகனநிறுத்துமிடத்தில் நடத்தப்பட்டது.
அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனுக்குப் பின்னால் 24 வயது ஆடவர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர்.
அந்த வேனைச் சோதனையிட்டபோது அதில் வரி செலுத்தப்படாத 1,740 சிகரெட் பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. சிகரெட்டுகளையும் வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.