செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காக டாக்சி ஓட்டுநர்கள் அவர்களது காரில் புதிதாக கருவிகள் பொருத்தி வருகின்றனர்.
புதிய கருவியைப் பொருத்த சில மணி நேரம் எடுக்கும் என்பதால் டாக்சி ஓட்டுநர்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு பாதிக்கப்படும் டாக்சி ஓட்டுநர்களுக்கு அவர்களது வாடகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஏமி கோர் தெரிவித்துள்ளார்.
நில போக்குவரத்து ஆணையமும் தேசிய டாக்சி சங்கமும் இணைந்து புதிதாக கருவிகளை பொருத்த உதவி வருகின்றன.
தனியார் வாடகை கார்கள் ஓட்டுபவர்களும், சொந்தமாக கார்களை வைத்துள்ள ஓட்டுநர்களுக்கும் புதிய கருவிகள் பொருத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கட்டங்கட்டமாக ‘இஆர்பி’ 2.0வுக்காக கார்களில் புதிய கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
2025ஆம் ஆண்டு முடிவுக்குள் ஒரு மில்லியன் வாகனங்களில் புதிய கருவி பொருத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.