இளையரிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்று கூறப்படுகிறது.
மிதமிஞ்சிய சமூக ஊடகப் பயன்பாட்டுடன், கூடுதல் விளையாட்டு நேரம், அதிக சுதந்திரம் போன்ற அம்சங்களும் இதில் அடங்கியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையர் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதன் அடிப்படைக் காரணங்களை கண்டறிய உலகின் மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் சிங்கப்பூர் தொடர்பு கொண்டுள்ளதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (பிப்ரவரி 7) அன்று கூறினார்.
மனநலனைப் பேணுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீது பேசிய துணைப் பிரதமர், தற்போதைய இளைய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் மனநலன் குறித்து அதிக கவலை தெரிவிக்கின்றனர் என்றார்.
இந்தப் போக்கு சிங்கப்பூரிலும் தென்படுவதாக அவர் கூறினார். எனினும், இது மற்ற நாடுகளில், போதைப் பொருள் புழக்கம், வீடில்லாத நிலைமை, பொதுவெளியில் வன்முறை போன்றவற்றால் மனநலப் பிரிச்சினை உயர்ந்த நிலையில் இருப்பதைப் போல், சிங்கப்பூரில் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
எனினும், மனநலன் என்பது பலதரப்பட்டது. மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கோ, மனநல மருத்துவரையோ தேடி ஓட வேண்டியதில்லை என்று துணைப் பிரதமர் விளக்கினார்.
இதனால்தான், மனநலப் பிரச்சினைக்கு ஆதரவு தரும் வகையில் பல அடுக்கு திட்டம் வகுக்கப்படுகிறது.
இதன்மூலம், மனநலம் தொடர்பாக இருக்கும் மாசுபடுத்தும் போக்கு மாறும் என்று நம்பிக்கை ஏற்படலாம். இது புதன்கிழமை நாடாளுமன்றத்தில் மனநலம் குறித்து எழுந்த விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, ஒருவருக்கு இருக்கும் மனநலப் பிரச்சினையின் கடுமைக்கு ஏற்றவாறு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சை முறையில் நான்கு அடுக்குகள் இருக்கும். மனநல சுகாதாரத்துக்கு ஆதரவு, மனநல மேம்பாடு, மனநலன் சார்ந்த சுயஉதவி மற்றும் கூடியிருப்பவர்களின் ஆதரவு இவற்றுடன் தீவிர சிகிச்சை முறையாக மருத்துவமனை, சிறப்பு மருந்தகங்களில் கவனிப்பு என நான்கு அடுக்குகளைக் கொண்ட சிகிச்சை முறை.
“இதை நாங்கள் கண்டிப்பாக செய்வோம். அதே சமயம், பலதுறை மருந்தகங்கள், தனியார் மருத்துவர்கள், பள்ளிகள், பணியிடங்கள், சமூகம் என பரந்த அளவிலான பராமரிப்பும் வழங்குவேம். இதன்வழி, தேவையுள்ளோர்க்கு தக்க தருணத்தில் ஆதரவு வழங்குவோம்,” என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் விளக்கினார்.