இனமறியா அன்புறவு

இனமறியா அன்புறவு

2 mins read
2870c02b-8c34-4933-93a5-269978d5c940
தம்பதியர் மயில்வாகனம் - லீ யின் கைகளில் சீனப் புத்தாண்டு பலகாரங்கள். - படம்: கி.ஜனார்த்தனன்

சீனப் புத்தாண்டுக்கு முந்திய மாபெரும் விருந்து சீனர்களின் வீட்டில் தடபுடலாக இருக்கும்.

சந்தைப் பொருள்களைக் குடும்பங்கள் அறக்கப்பறக்க வாங்கி, பெரியவர்களின் வீட்டில் விதவிதமாய்ச் சமைத்து மாலை நேர ஒன்றுகூடலுடன் கொண்டாட்டம் தொடங்கும்.

தகராறுகள், முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் சீனப் பெருநாள் புத்தாண்டு விருந்தின்போது அவையெல்லாம் புறந்தள்ளப்பட்டுவிடும். உறவினர்கள் எல்லோரும் வந்தாகவேண்டும். கொண்டாட்ட நேரத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதால் மனக்காயங்கள் இருந்தாலும் அவை மெல்ல ஆறுகின்றன.

சீனப் பண்பாட்டில் இந்தப் பரந்த மனப்பான்மையைத் தாம் மிகவும் விரும்புவதாகச் சொன்னார், சீன மாது ஒருவருடன் 25 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இணைந்துள்ள தொழில்நுட்பர் முனுசாமி மயில்வாகனம், 60.

இவரைப் பொறுத்தவரையில், சீனப் பெருநாளன்று பிள்ளைகளுக்கு சிவப்பு ‘அங் பாவ்’ உறைகளை வழங்கி, சீட்டாட்டம் ஆடி, பாட்டுப் பாடி, சிரித்து, அரட்டை அடிப்பது தனியின்பம்.

புத்தாண்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்னமே சைனாடவுனில் பலகாரங்களையும் உணவுப் பொருள்களையும் வாங்கி வைப்பது இவர்கள் வழக்கம். சீனப் பெருநாள் விருந்துக்கான உணவுவகைகளைத் திரு மயில்வாகனம் சந்தையிலிருந்து வாங்குவார். அவருடைய மனைவி சூ லீ யின், 52, தம் கணவரை தம் பெற்றோர் வீட்டுக்கு அழைப்பார். அங்கு அவர், கோழியைத் துண்டுகளாக வெட்டுவது, காய்கறிகளை நறுக்குவது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்.

இவ்வாறு செய்வது திரு மயில்வாகனத்திற்கு முப்பது ஆண்டுகளுக்கு மேலான வழக்கமாக இருந்து வருகிறது. 1990ல் திரு மயில்வாகனமும் அவர் மனைவியும் சந்தித்ததைத் தொடர்ந்து காதல் மலர்ந்தது. ஏழாண்டுக் காதலுக்குப் பிறகு அவர்கள் திருமண உறவில் இணைந்தனர்.

தொடக்கத்தில் திருவாட்டி சூவின் தந்தை, அவர்களின் காதலை முழுமனத்துடன் ஏற்கவில்லை. சிரமமிக்க அந்தக் காலக்கட்டத்தில் நிதானத்தைக் காக்கும்படி தம் கணவர் அறிவுறுத்தியதை திருவாட்டி சூ நினைவுகூர்ந்தார்.

“உலகம் பெரிது என்று என் கணவர் கூறினார். அவசரப்படாமல் தீர யோசித்து முடிவெடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்தப் பெருந்தன்மை என்னை மேலும் கவர்ந்தது,” என்றார் திருவாட்டி சூ.

காலப்போக்கில் மயில்வாகனம் தம்மை நல்ல மருமகனாகவும் குடும்பத் தலைவராகவும் நிரூபித்ததைப் பார்த்து தம் தந்தையின் மனம் மெல்ல மாறியதாகவும் திருவாட்டி சூ கூறினார். இத்தம்பதியருக்கு டேமியன் மயில்வாகனம் என்ற 24 வயது மகன் இருக்கிறார்.

“சீன பெளத்த ஆலயங்களுக்கு என் கணவர் செல்வார். நானும் அடிக்கடி சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்வேன். அங்குள்ள அர்ச்சகர்கள் எனக்குத் தெரிந்தவர்களே!” என்று திருவாட்டி சூ கூறினார்.

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி திருநாளின்போதும் இவர்களது இல்லம் களைகட்டும்.

சீனப் புத்தாண்டைப் போல மன்னித்து மறக்கும் நாள்களாக, தமிழ்ச் சமூகத்திற்கு அந்தப் பண்டிகை நாள்கள் திகழவேண்டும் என்பது திரு மயில்வாகனத்தின் விருப்பம்.

குறிப்புச் சொற்கள்