ஒவ்வொரு பண்டிகையிலும் சிங்கப்பூரின் பண்பாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு வியக்கிறார் வெளிநாட்டு ஊழியர் செந்தில்குமார்.
“சிங்கப்பூர், கலாசாரத்தைச் சிறப்பாகப் பாராட்டும் ஒரு நாடு,” என்றார்.
அவரைப் போல எண்ணிலடங்கா வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆரவாரத்துடன் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சூன் லீ பொழுதுபோக்கு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 11ஆம் தேதியன்று இரவு 7 முதல் 10 மணி வரை நடைபெற்றன.
ஆண்டுதோறும் இவற்றுக்கு ஏற்பாடு செய்கிறது வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம்.
“சீனப் புத்தாண்டைப் பொது விடுமுறை நாளாக மட்டும் உணர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு, சீனப் பண்பாட்டின் நெறிகளையும் வழக்கங்களையும் பற்றித் தெரியப்படுத்த விரும்பினோம்.
“இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களது தனிமையையும் போக்குகின்றன,” என்றார் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் துணை நிர்வாக இயக்குநர் ஜோஷுவா ஷாம்.
சிங்க நடனம், முகமூடி மாற்றும் மாய வித்தைகள், சீன, தமிழ், ஆங்கில, பங்ளாதேஷ் பாடல்கள், விளையாட்டுகள் எனப் பல சுவாரசியமான அங்கங்கள் வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்தன.
விறுவிறுப்பான தமிழ்க் குத்துப் பாடல்கள் அமர்ந்திருந்த வெளிநாட்டு ஊழியர்களை எழுந்து ஆடச் செய்தன. பாடல்களை மெய்மறந்து ரசித்து, அதற்கு ஏற்றவாறு மேடைக் கலைஞர்களுடன் சேர்ந்தும் அவர்கள் ஆடினர்.
அன்றாடம் உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தேவைப்படும் சுதந்திரத்தை இந்நிகழ்ச்சி கொடுத்தது.
அதிர்ஷ்டக் குலுக்கில் ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. முதல் மூன்று நிலைகளில் வந்தோருக்கு $1,000, $500, $300 வழங்கப்பட்டன.
இரண்டாம் பரிசை வென்ற சிவா, 35, அப்பணத்தை இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு அனுப்பவிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இவற்றுடன் வெளிநாட்டு ஊழியர் நிலைய இணை உறுப்பினர் (Associate membership) திட்டங்களுக்கான இரு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வேலைநேரத்திற்கு அப்பாற்பட்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏதேனும் நடந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் காப்புறுதி, மளிகைப் பொருள், தொலைத்தொடர்புச் சலுகைகள், போன்றவை இத்திட்டத்தில் அடங்குகின்றன.
“இங்கு வருவோரின் தேவைகளுக்கு செவிசாய்த்து, அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் என்னென்ன வகையில் உதவும் என்பதை விவரிக்கிறோம்,” என்றார் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதராக ஐந்தாண்டுகளாக உதவிவரும் குட்டன் மோஹனன்.
“தமிழர்களை வாழவைக்கும் இரண்டாவது தாய்நாடு சிங்கப்பூர்தான்,” எனப் பாராட்டினார் சிவாஜி, 38.
“சிங்கப்பூரில் தமிழர்களுக்கு நிறைய அங்கீகாரம் கொடுக்கப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நாங்கள் மிகவும் இன்புற்றோம்,” என்றார் மாதவன், 25.