ஆடவர் ஒருவரிடமிருந்து $40,000 பறிக்க தீட்டப்பட்ட திட்டத்துக்கு மூளையாகச் செயல்பட்ட 51 வயது ஆடவர் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய குற்றத்தை டாட் லிம் ஒப்புக்கொண்டார்.
திரு யின் யாங் எனும் 33 வயது ஆடவரை லிம் குறிவைத்தார். திருவாட்டி வாங் மெங்மெங் என்று அடையாளம் காணப்பட்ட மாதிற்குச் சொந்தமான $40,000ஐ திரு யின் தர மறுத்துவிட்டதாக லிம் கருதினார்.
திருவாட்டி வாங்கிற்கும் லிம்முக்கும் இடையேயான உறவு குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
லிம்மின் உடன்பிறப்பின் மகனான ஐவன் லிம் டெங் ஸியும் சதித்திட்டத்தில் தாம் பங்குகொண்டதை ஒப்புக்கொண்டார். அவருக்கு செவ்வாய்க்கிழமை மூன்று மாத, இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டாட் லிம்முக்கு $15,000 பிணைத் தொகையும் ஐவன் லிம்முக்கு $20,000 பிணைத் தொகையும் வழங்கப்பட்டது.
தண்டனையைத் தொடங்க இருவரும் பிப்ரவரி 27ஆம் தேதி அரசு நீதிமன்றத்தில் சரணடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.