சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் (என்டியு) நீடித்த நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட புதிய கணக்கியல் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல துறைகளுக்கு இடையிலான முக்கிய பொருளியல் அம்சங்களை புரிந்துகொள்ள இது வாய்ப்பு அளிப்பது மட்டுமல்லாமல் விரைவாக முடிக்கவும் வழி வகுக்கிறது.
நிலைத்தன்மை நிர்வாகம் மற்றும் பகுப்பாய்வில் அந்த நான்கு ஆண்டு கணக்கியல் பட்டம் வழங்கப்படும்.
நிலைத்தன்மை அறிக்கை விவரங்கள், நிலையான நிதி, கணக்கியலில் செயற்கை நுண்ணறிவு, மற்றும் நிதி உள்ளிட்ட தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்று இருக்கும் என்று பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் என்டியு தெரிவித்தது.
நன்யாங் வர்த்தகப் பள்ளி வழங்கும் இந்தப் பட்டக்கல்வி, பட்டயக் கணக்காளர் (சிஏ) தகுதி பெற விரைவான பாதையை அமைத்துத் தரும் என்று அறிக்கை குறிப்பிட்டது.
கணக்கியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையத்தால் (அக்ரா) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாணவர்கள் குறைந்தபட்சம் 30 வாரகால நேரடி வேலையிடப் பயிற்சி பெறவும் பட்டடப் படிப்பு கைகொடுக்கிறது.
“வேலை-கல்வி திட்டத்தில் மாணவர்கள் வேலையிட நேரடி பயிற்சி பெறுவதால் தொழில்துறையை நன்கு புரிந்துகொள்ள முடியும்,” என்று அக்ராவின் தலைமை நிர்வாகியான ஓங் கியாவ் ஹோங் தெரிவித்தார்.
முக்கிய நிலைத்தன்மை மற்றும் பகுப்பாய்வு திறன்களை மாணவர்களிடம் மேம்படுத்தி எதிர்காலத்தில் இத்துறையில் சிறந்த தலைவர்களை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் 2024ஆம் ஆண்டில் வழங்கும் துறைகளுக்கு இடையிலான ஒன்பது இளநிலைப் பட்டப் படிப்பில் இதுவும் ஒன்று.
செயற்கை நுண்ணறிவு, சீன மருத்துவம், நிதித் துறையில் கணினி செயல்முறை, தத்துவம், அரசியல் மற்றும் பொருளியல் ஆகியவை இவற்றில் அடங்கும்.