துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், இந்த ஆண்டுக்கான (2024) வரவுசெலவுத் திட்டத்தை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) பிற்பகல் 3.30 மணியிலிருந்து நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். .
அதில், தகுதிபெறும் சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை ஈடுகட்ட, ஒருமுறை மட்டும் கொடுக்கப்படும் வழங்குதொகையாக $200 முதல் $400 வரை ரொக்கமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சொத்துக்குமேல் வைத்திராத, ஆண்டு வருமானம் $100,000க்குமேல் ஈட்டாத சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதிபெறுவர்.
மேலும், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் தகுதிபெறும் குடும்பங்களின் பொதுப் பயனீட்டுக் கட்டண உயர்விற்கு ஈடுகட்ட உதவும் வகையில், யு-சேவ் சிறப்புத்தொகையாக ஒருமுறை மட்டும் $950 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மூன்றறை, நான்கறை வீடுகளில் வசிப்போரின் கிட்டத்தட்ட நான்கு மாத பயனீட்டுக் கட்டணத்தைச் செலுத்த இது உதவும்.