பொய்ச் செய்திகளைத் தடுக்கும் பொஃப்மா சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் (பிஎஸ்பி) தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய்க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
சுகாதாரப் பிரச்சினைகளுக்காக நிதி உதவி தேவைப்படும் தம்பதியினரைப் பற்றிய திரு லியோங்கின் ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் தொடர்பில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அந்தப் பதிவின் தகவல்களுக்கு திருத்தம் வெளியிடுமாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வெஸ்ட்கோஸ்ட் வட்டாரத்தில் வசிக்கும் 60 வயது கணவரும் 55 வயது மனைவியும் இல்லப் பராமரிப்பாளர் மானியம் தவிர்த்து அன்றாடச் செலவுகளுக்கு அரசாங்கத் துறைகளின் நிதி உதவி எதனையும் பெறவில்லை என பிப்ரவரி 12ஆம் தேதி வெளியிட்ட பதிவில் திரு லியோங் குறிப்பிட்டிருந்தார்.
கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்வையிழந்த நிலையில் அவரது மனைவி கீழே விழுந்ததில் கணுக்கால் முறிந்துவிட்டதாகக் கூறிய அவர், காலுக்கு பிசியோதெரபி என்னும் உடற்பயிற்சி சிகிச்சை எடுக்க ஒவ்வொரு முறையும் $100 செலவு ஆவதால் அந்தச் சிகிச்சையை அவர் தவிர்த்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
தம்பதிக்கு நிதி உதவி தேவைப்படுவதை அறிந்து தாமும் தமது கட்சியின் வெஸ்ட் கோஸ்ட் குழுவினரும் அவர்களைச் சென்று பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போக்குவரத்துச் செலவுகளுக்கு உதவி கேட்டு அந்தத் தம்பதி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் திரு லியோங் தமது பதிவில் குறிப்பிட்டார்.
ஆனால், தம்பதிக்கான நிதி உதவி தொடர்பில் திரு லியோங் கூறியிருப்பவை பொய் என்று வியாழக்கிழமை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் உள்ளிட்ட நிதி உதவிகளை அந்தத் தம்பதி பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெற்றுவருவதாகவும் அமைச்சு கூறியது.
பெண்ணின் மெடிசேவ் கணக்கில் $60,000க்கும் மேல் இருப்பதால் பிசியோதெரபி சிகிச்சைக்கு கையில் இருந்து பணம் செலுத்தத் தேவையில்லை என்றும் அது விளக்கியது.
திரு லியோங்கின் பதிவு, பின்னர் ‘த ஆன்லைன் சிட்டிசன்’ ஃபேஸ்புக் பக்கத்திலும் கட்ஸி ஏஷியாவின் ஃபேஸ்புக், எக்ஸ் மற்றும் இணையத்தளத்திலும் வெளியானது.
திரு லியோங்கிற்கும் கட்ஸி ஏஷியா மற்றும் த ஆன்லைன் சிட்டிசனுக்கும் பொஃப்மா சட்டத்தின்கீழ் திருத்த உத்தரவு பிறப்பிக்குமாறு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஜுல்கிஃப்லி கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, திருத்தம் வெளியிடுமாறு திரு லியோங்கிற்கும் மற்ற இரு அமைப்புகளுக்கும் பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக திருத்தம் வெளியிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.