சிங்கப்பூர் குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்ட மின்சார உற்பத்திக்கு மாறி வருகிறது. இதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கான எதிர்கால எரிசக்தி நிதிக்கு ஐந்து பில்லியன் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இதனை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சூரிய சக்தி, காற்று, நீராலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை இறக்குமதி செய்வது, நீருக்கடியில் அமைக்கப்படும் கேபிள்கள் மற்றும் தற்போதைய மின்சார உற்பத்தியை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படும்.
ஹைட்ரஜன் மின்சாரத்தின் பயன்பாட்டை அரசாங்கம் அதிகரித்தால் அதனை உற்பத்தி செய்து, சேமித்து, விநியோகிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன.
முழுமையாக இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் எரிசக்தியிலிருந்து தூய்மையான எரிசக்திக்கு மாறுவதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகளும் செலவுகளும் தேவைப்படுவதாக திரு லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.
பெரிய அளவிலான இந்த மாற்றங்களை அடுத்த இருபது ஆண்டுகளில் செய்து முடித்தாக வேண்டும். குறைந்த கரிம வெளியேற்றத்தைக் கொண்ட எரிசக்திக்கு மாறும் பணிகளைப் பார்த்தால் இந்தக் காலம் போதுமானது அல்ல என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.