அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைக்கும் வகையில், சிங்கப்பூர்வாசிகள் கடந்த ஆண்டு ஈட்டிய வருமானத்திற்கு 50 விழுக்காடு தனிநபர் வருமான வரிக் கழிவைப் பெறுவார்கள் என வரவுசெலவுத் திட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அதிகபட்ச வரம்பு $200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருமானம் ஈட்டும் ஊழியர்கள் கூடுதல் பலன்பெறும் வகையில் இக்கழிவை அறிவித்திருப்பதாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறினார்.
சார்ந்திருப்போர் தொடர்பான வரிக் கழிவுக்கான ஆண்டு வருமான வரம்பை $4,000 முதல் $8,000 வரை அரசாங்கம் அதிகரிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“பொதுமக்கள், வரி நிபுணர்கள், தொழிலாளர் சங்கத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளாக வருமானங்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பினால், சார்ந்திருப்போரில் பலர் முன்பு இருந்த வருமான வரம்பைக் கடந்துவிட்டதாக நிபுணர்கள் கூறினர். ஆனால் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவீனங்களைச் சமாளிக்க மேலும் கழிவுகள் தேவைப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.