அரசாங்க திட்டம் தொடர்பான மானியங்களை நிர்வகிப்பதற்கான கூடுதல் அதிகாரங்கள் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு (ஐராஸ்) வழங்கப்பட்டு உள்ளன.
எனவே, அரசாங்க அமைப்புகள் மற்றும் இதர சட்டபூர்வ அமைப்புகள் சார்பாக ஆணையம் இயங்கும்.
மேலும், மானியம் தொடர்பான முறைகேடுகளை விசாரிக்கும் அதிகாரமும் அதனிடம் தரப்பட்டுள்ளது. அதனால், கடுமையான மானிய முறைகேடுகள் தொடர்பில் ஐராஸின் விசாரணைக்கு இணங்க மறுப்பதும் விசாரணையில் தலையிடுவதும் இனி குற்றமாகும் என்று நிதி இரண்டாம் அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்து உள்ளார்.
வரிவிதிப்பை நிர்வகிக்கும் தற்போதைய பொறுப்புகளுடன் மானியத் தொகையை வழங்கும் அமைப்பாகவும் செயல்படும் வகையில் ஆணையத்தின் பொறுப்புகள் இந்த மாற்றம் மூலம் முறைப்படுத்தப்படும்.
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐராஸ் திருத்த மசோதா, ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
நிறுவன மானியங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, மானியத்தில் மோசடி செய்வது போன்ற புகார்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதோடு தவறாக வழங்கப்பட்ட மானிய நிதியைத் திரும்ப வசூலிக்கும் அதிகாரத்தையும் ஆணையத்திற்கு வழங்குகிறது திருத்த மசோதா.
நாடாளுமன்றத்தில் மசோதா மீதான இரண்டாம் வாசிப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு சீ, படிப்படியாக உயரும் சம்பளம் தொடர்பான உதவித் திட்டம் போன்ற பெரிய மானியங்களை வர்த்தகங்களுக்கு வழங்குவதை கடந்த பத்தாண்டுகளாக கௌரவ முறையில் ஐராஸ் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
அந்த வகையில், கடந்த ஆண்டு S$4.6 பில்லியன் (US$3.4 பில்லியன்) மதிப்புள்ள மானியங்களை 120,000க்கும் மேற்பட்ட வர்த்தகங்களுக்கு ஐராஸ் வழங்கி உள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்று மிகுந்திருந்த காலகட்டத்தில், அந்தத் தொகையைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகமான மானியங்களை 150,000க்கும் மேற்பட்ட வர்த்தகங்களுக்கு அது வழங்கியது.
“நிலையான நேரத்திலும் நெருக்கடி காலத்திலும் அரசாங்க மானியங்களை வழங்கும் ஆணையத்தின் தொடர்ச்சியான செயலைக் கணக்கிடுகையில், ஐராஸ் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள உத்தேசத் திருத்தங்கள் அதன் அதிகாரங்களை முறைப்படுத்தும்.
“வரிவிதிப்பு நிர்வாகத்துடன், மானியங்களை வழங்கும் கூடுதல் அதிகாரத்தையும் ஆணையம் பெறும்,” என்று திரு சீ விவரித்தார்.