கம்போங் கிளாமில் இவ்வாண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆகப் பெரிய, பல நாள் நோன்புப் பெருநாள் சந்தை அமைக்கப்பட இருக்கிறது.
இந்தச் சந்தை மார்ச் மாதம் 2ஆம் தேதியிலிருந்து ஐந்து வாரங்களுக்குக் களைகட்டும்.
அதில் உணவு, சில்லறை வர்த்தகப் பொருள்களை விற்கும் 100க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் ஏறத்தாழ 80 கடைகள் உணவு மற்றும் பானங்களையும் கிட்டத்தட்ட 20 கடைகள் சில்லறை வர்த்தகப் பொருள்களையும் விற்கும்.
கம்போங் கிளாமில் நான்காவது முறையாக நோன்புப் பெருநாள் சந்தை அமைக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் நோன்பு இருக்கும் ரமதான் மாதம் தொடங்க ஒரு வாரம் இருக்கும்போது சந்தை தொடங்கும்.
ஏப்ரல் 5ஆம் தேதி வரை அது நாள்தோறும் பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயங்கும்.
கந்தஹார் ஸ்திரீட், மஸ்கட் ஸ்திரீட், பாக்தாத் ஸ்திரீட் ஆகிய இடங்களில் சந்தை அமைக்கப்படும்.
நேரடி சமையல் நிகழ்ச்சிகளையும் உள்ளூர் மற்றும் மலேசியக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளையும் சந்தையில் கண்டு மகிழலாம்.
இவ்வாண்டு ஏறத்தாழ 700,000 பேர் சந்தைக்கு வருவர் என்று சந்தையை நடத்தும் ஒன் கம்போங் கிளாம் எதி்ர்பார்க்கிறது.