உட்லண்ட்ஸ் நிலங்களை சிங்கப்பூரிடம் விற்க மலேசியா இன்னும் முடிவு செய்யவில்லை

உட்லண்ட்ஸ் நிலங்களை சிங்கப்பூரிடம் விற்க மலேசியா இன்னும் முடிவு செய்யவில்லை

2 mins read
60b3cd22-19e7-45a6-8597-94ad72e57b45
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் எல்லைக்குள் நுழையும் வாகனங்கள். - படம்: ஏஎஃப்பி

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மலேசியாவுக்குச் சொந்தமான இரு நிலப் பகுதிகளை சிங்கப்பூர் வாங்க உத்தேசித்துள்ளது. ஆயினும், அவற்றை விற்பது பற்றி மலேசியா இன்னும் முடிவு செய்யவில்லை என த ஸ்டார் இணையச் செய்தி குறிப்பிடுகிறது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி மறுமேம்பாட்டால் அந்த நிலப்பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

நில விற்பனை குறித்து சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் டாக்டர் அஸ்ஃபார் முஹம்மது முஸ்தஃபார் கருத்துரைத்து உள்ளார்.

“நிலப் பகுதிகளை சிங்கப்பூர் வாங்குவது என்பதில் அர்த்தமுள்ளது. நிலத்தை விற்பது, வாங்குவது என்பது இதற்கு முன்னர் நடைபெற்று உள்ளது.

“இருப்பினும், தற்போது இந்த நிலப் பகுதிகளை விற்பது அல்லது நிலத்தை மாற்றுவது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை,” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மலேசிய செய்தியாளர்களிடம் சனிக்கிழமை (பிப்ரவரி 17) பேசிய திரு அஸ்ஃபார், “நிலத்தை வாங்குவதன் தொடர்பில் மலேசியாவுக்கு சிங்கப்பூர் கடிதம் எழுதி உள்ளது.

“மலேசியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலகம் அது பற்றி இன்னும் பரிசீலித்து வருகிறது.

“இதுவரை, அதன் தொடர்பில் எந்தவொரு தகவலும் வரவில்லை,” என்று கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள எல்லா நிலங்களும் மலேசியாவின் மத்திய நில ஆணையாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏறக்குறைய 0.93 ஹெக்டர் (2.3 ஏக்கர்) பரப்பளவு உள்ள நிலப் பகுதிகளை வாங்க கடந்த ஆண்டே சிங்கப்பூர் விருப்பம் தெரிவித்ததாகவும் அதனை தாம் முன்மொழிந்ததாகவும் குறிப்பிட்ட திரு அஸ்ஃபார், முடிவு செய்ய வேண்டியது மலேசிய கூட்டரசுதான் என்றார்.

குறிப்புச் சொற்கள்