கடமையைச் செய்யவிடாமல் நீதித் துறையை தடுக்க முயற்சி செய்த விவகாரத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 மே மாதம் வழக்கறிஞர் வீ ஹோங் ஷெர்ன் கடத்தல் சிகரெட்டுகள் தொடர்பில் மற்றொரு வழக்கறிஞரான ஓங் பெங் பூனுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்த குறுந்தகவலை ஓங், டான் ஹோக் ஆன் என்று அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு அனுப்பி வைத்தார். டான் பின்னொரு தேதியில் சுங்கவரி செலுத்தப்படாத சிகரெட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
குறுந்தகவலை அனுப்பியதன் மூலம் இரு வழக்கறிஞர்களும் கடத்தல் சிகரெட் தொடர்பான சாட்சியங்களை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கும்பலை முன்கூட்டியே எச்சரித்துள்ளனர் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 19ஆம் தேதி வீ ஹோங் ஷெர்ன், 36, ஓங் பெங் பூன், 67 ஆகிய இருவரும் நீதித் துறை தனது கடமையை செய்யவிடாமல் வேண்டுமென்றே தடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளி என மாவட்ட நீதிபதி மெர்வின் பே தீர்ப்பு அளித்தார்.
சட்ட அமைச்சின் இணையப் பக்கத்தில் தேடியபோது இரு வழக்கறிஞர்களும் ஓங் அண்ட் கோ என்ற சட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் என்பது தெரிகிறது.
2019ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நிலவரப்படி வீ சுருக்கமாக ஓங்குக்கு தகவல் அனுப்பியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலை தற்போது பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் எப்படியும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமாக எல்லாப் பொருள்களையும் அகற்றிவிடுங்கள் என்பதுபோல குறுந்தகவல் இருந்தது.
ஒரு நிமிடத்தில் ஓங் அந்த குறுந்தகவலை டானுக்கு அனுப்பி வைத்தார்.
ஓங், ‘படித்ததும் அழித்து விடவும்’ என்று மற்றொரு தகவலையும் உடனே அனுப்பினார்.
வீ, ஓங்குக்கு தகவல் அனுப்பியதும் அவர் பின்னர் டானுக்கு அனுப்பியதையும் மறுக்கப்படவில்லை என்பதை அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியது.
நீதித் துறையின் கடமைக்கு இடையூறு செய்வதாக குறுந்தகவல் இருந்துள்ளது.
இரு வழக்கறிஞர்களுக்கும் ஏப்ரல் மாதம் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர்கள் இருவரும் தண்டனைக் குறைப்பு வாதத்தை முன்வைப்பர்.