மனைவியைத் தாக்கிய ஆடவருக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 19) எட்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மனைவியுடனும் நான்கு பிள்ளைகளுடன் வசித்து வந்த அந்த 54 வயது மலேசியர் சிங்கப்பூர் நிரந்தரவாசி ஆவார்.
தம்பதியினர் ஒழுங்கீனமான திருமண உறவு கொண்டிருந்ததாகவும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் திட்டுவதும் தாக்குவதும் நீடித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுகளில் கணவருக்கு எதிராக அந்தப் பெண் நான்கு முறை காவல்துறையில் புகார் செய்துள்ளார். அதேபோல ஆடவரும் குடும்ப வன்முறை தொடர்பாக தமது மனைவிக்கு எதிராக ஒருமுறை காவல்துறையில் புகார் செய்தார்.
கணவருக்கு எதிராக அந்தப் பெண் தனிநபர் பாதுகாப்பு ஆணை பெற்றிருந்தார். இருப்பினும், அந்த ஆணையை ஆடவர் மீறினார்.
மனைவி மீது நடத்திய தாக்குதல் காரணமாக அந்தப் பெண்ணின் முகம் சிதைந்ததோடு பார்வைக்கோளாறும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களின் இரண்டு பிள்ளைகள் காவல்துறையிடம் புகார் செய்தனர்.
பின்னர் அந்தத் தம்பதியினர் மணவிலக்கு பெற்றனர்.
முன்னதாக, ஒருமுறை தூங்கிக்கொண்டிருந்த கணவரை அடித்து எழுப்பினார் அந்தப் பெண்.
பதிலுக்குத் தாக்கத் தொடங்கிய ஆடவர், அந்தப் பெண்ணின் முகத்தில் குத்திக்கொண்டே, “ஏன் எப்போதும் என்னை அடிக்கிறாய்? ஏன்? ஏன்?,” என்று உரக்கக் கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.