பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தின்கீழ் அடுத்த இருபது ஆண்டுகளில் ஏறக்குறைய 29,000 தாதியருக்கு 100,000 வெள்ளி வரை வழங்குதொகை கொடுக்கப்படவிருக்கிறது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இதனை அறிவித்தார்.
‘ஏஞ்சல்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாதியர்களை தக்கவைத்துக் கொள்ளும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் பொதுச் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் புதிய, ஏற்கெனவே பணியில் உள்ள 46 வயதுக்குட்பட்ட தாதியர்களுக்கு ஒவ்வொரு நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்குதொகையைப் பெறுவர். ஒவ்வொரு வழங்குதொகையும் 20,000 வெள்ளி முதல் 30,000 வெள்ளி வரை இருக்கும்.
தாதியர்கள் பணியில் இருக்கும் அடுத்த 20 ஆண்டுகளில் அல்லது நடைமுறையில் உள்ள ஓய்வு பெறும் வயது வரை அவர்களுக்கு மொத்தமாக $100,000 வரை கிடைக்கும் சாத்தியம் உள்ளது.
இவ்வாண்டு செப்டம்பரில் அல்லது அதற்குப் பிறகு குறைந்தது நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் இருக்கும் வெளிநாட்டுத் தாதியர்களும் அதே அளவு வழங்குதொகைக்குத் தகுதிபெறுவர்.
46 வயதுக்கு மேற்பட்ட தாதியர்கள் ஒவ்வொருவரும் $5,000 முதல் S$15,000 வரை அவர்களை அங்கீகரிக்கும் ஒருமுறை வழங்குதொகையைப் பெறுவர். இது, அவர்கள் பணியாற்றும் காலத்தையும் குறைந்தது ஐந்து ஆண்டுகள் இருப்பதையும் பொறுத்து இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அடுத்ததடுத்த வழங்குதொகை விரைவுபடுத்தப்படும். அதாவது, ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர்கள் வழங்குதொகையைப் பெறுவர். ஒரு தாதிக்கு அதிகபட்ச வழங்குதொகை $100,000 வரை இருக்கும். இந்த வழங்குதொகை ஓய்வு வயதை அடையும்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ இருக்கும் என்று சுகாதார அமைச்சு விளக்கியது.
ஓய்வூதியத்திற்குப் பிந்தைய ஒப்பந்தங்களில் உள்ள தாதியர்கள் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சேவையில் இருந்தால், அவர்கள் ஒரு முறை அங்கீகார வழங்குதொகையைப் பெறுவார்கள். ஆனால் அது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய திட்டத்தின்கீழ் பயனடையும் 29,000 தாதியர்களில் ஏறக்குறைய 24,000 தாதியர்கள் பொதுச் சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள். பொதுநிதியில் செயல்படும் சமூகப் பராமரிப்பு நிறுவனங்கள் அல்லது சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்த இதர 5,000 தாதியர்கள், அவர்களது முதலாளிகள் திட்டத்தில் பங்கேற்றால் வழங்குதொகையால் பயனடைவர். ஆனால் முதலாளிகள் வழங்குதொகை விருதுக்கு இணையாக நிதியளிக்க வேண்டும். இதில் பெரும்பாலான நிதி அரசாங்கத்திடமிருந்து வருகிறது.