சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே சட்டவிரோத போக்குவரத்துச் சேவை வழங்கிய நான்கு ஒட்டுநர்களை நிலப் போக்குவரத்து ஆணையம் பிடித்துள்ளது.
நால்வரும் உரிமம் இல்லாமல் அந்தப் போக்குவரத்துச் சேவையை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் நடத்தப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் இந்த நான்கு ஓட்டுநர்களும் பிடிபட்டதாக பிப்ரவரி 21ஆம் தேதியன்று ஃபேஸ்புக்கில் ஆணையம் பதிவிட்டது.
அமலாக்க நடவடிக்கை எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பான ஃபேஸ்புக் பதிவில் சில படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
அதில் சில பெரிய கார்களை நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் நிறுத்தியதையும் அவற்றைக் கட்டி இழுத்துச் சென்றதையும் காண முடிந்தது.
தகுந்த பொதுச் சேவை வாகன உரிமம் இல்லாது சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே போக்குவரத்துச் சேவை வழங்க அனுமதி இல்லை என்று ஆணையம் தெரிவித்தது.
விபத்து நேர்ந்தால் பயணிகளைப் பாதுகாக்க போதுமான காப்புறுதித் திட்டத்தை அத்தகைய சட்டவிரோத போக்குவரத்துச் சேவை வழங்குபவர்கள் வைத்திருப்பது சந்தேகமே என்று தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத போக்குவரத்துச் சேவை வழங்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $3,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம்.