‘கார்ட்லைஃப்’ என்ற தனியார் தொப்புள்கொடி ரத்த சேமிப்பு வங்கியின் கலன்களில் சேமிக்கப்பட்டிருந்த தொப்புள்கொடி ரத்தம் சரியான வெப்பநிலையில் பராமரிக்கப்படாததால் பாழாயின.
இதனால், பாதிக்கப்பட்ட பெற்றோரைத் தொடர்புகொண்டு தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக செலுத்திய கட்டணத்தை அந்நிறுவனம் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்குத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெற்றோர் அந்நிறுவனத்திடமிருந்து கடிதம் ஒன்றை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பெற்றுள்ளனர். அதில், 2022, 2023ஆம் ஆண்டுகளில் செலுத்தப்பட்ட வருடாந்திரக் கட்டணங்களைத் திரும்பத் தருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.
எனினும், சில பெற்றோர் அந்நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை. அதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட 100க்கும் குறைவான பெற்றோர் அடங்கிய குழு ஒன்று அந்நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கையைத் தொடரத் தங்கள் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.