முன்யோசனை இல்லாமல் கத்தியைப் பயன்படுத்தி கணவரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாது மீது மேலும் 12 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பல வங்கிகளை ஏமாற்றிய குற்றச்சாட்டுகளும் அடங்கும். இந்தக் குற்றச்சாட்டுகள் யாவும் புதன்கிழமை (பிப்ரவரி 21) அன்று சுமத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனியா ஷாப், 51, என்ற அந்த மாது மீது பெயர் குறிப்பிடாத பலருடன் சதியில் ஈடுபட்டு பல வங்கிகளின் கணினி கட்டமைப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவியதாக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் மீது ஏற்கெனவே பொது இடத்தில் ஆயுதம் ஏந்தி முன்யோசனையின்றி கணவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டு கடந்த டிசம்பர் மாதம் சுமத்தப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
இதில் ஆகக் கடைசியான குற்றச்சாட்டுகளில் அவர் மற்றவர்களுடன் சேர்ந்து 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுஓபி வங்கியை ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
அந்த வங்கியில் அவர் தமது பெயரில் கணக்குத் தொடங்கி அதை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்ற குற்றச்செயலில் அவர் ஆர்எச்பி வங்கி, சிங்கப்பூர் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, பிஓஎஸ்பி/டிபிஎஸ் வங்கி, எச்எஸ்பிசி ஆகிய வங்கிகளிலும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

