இணைய விளையாட்டுக் கருத்தாய்வு: களம் புகுவோரின் கருத்து

இணைய விளையாட்டுக் கருத்தாய்வு: களம் புகுவோரின் கருத்து

2 mins read
இணையத்தளம் உள்ளிட்ட எல்லாத் தளங்களிலும் அறிமுகமில்லாதவர்களுடன் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கவேண்டும் என்பது தமிழ் முரசுடன் பேசிய சில இணைய விளையாட்டாளர்களின் பொதுவான கருத்தாகும். தொடர்பு, தகவல் அமைச்சு, இளையர் சம்பந்தப்பட்ட இணைய விளையாட்டுகள் தொடர்பில் வெளியிட்ட முதல் ஆய்வின் முடிவுகள் குறித்து இவர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தனர்.
ffcfcc97-84c1-45c3-9b40-b61cd37dc773
இணைய விளையாட்டு. - படம்: ஏஎஃப்பி

பதின்மூன்று வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட இணைய விளையாட்டாளர்களில் ஐந்தில் ஒருவர், சக விளையாட்டாளர்களால் தாம் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை உணர்கின்றனர்.

ஏளனம் செய்யும் வாசகங்கள், தகாத வார்த்தைகள் அல்லது புறக் கணித்தல் மூலமாக விளையாட்டாளர்கள் மனம் வருத்தப் படலாம்.

விளையாட்டாளர்களின் அனுபவம்

விளையாட்டுத் திறன் மேம்பட ஆசைப்படுபவர்கள் சாவல்மிக்க இணைய விளையாட்டுகளில் குழுவாகக் களம்புகுவதாக இணைய நிர்வாக பணியாளர் சத்தியராஜ் விஜய தேவர், 34, தெரிவித்தார்.

சிறுவனாக வளர்ந்தபோது குடும்பத்துடன் எந்த நடவடிக்கையும் பெரிதாக ஈடுபடாத திரு சத்தியராஜ், நாள் முழுவதும் கணினி விளையாட்டுகளில் மூழ்கினார்.

“விளையாட்டில் அதிக நேரம் செலவழித்ததால் என் திறன்கள் பெருகின. துன்புறுத்தலுக்குப் பதிலாக சக விளையாட்டாளர் களால் மதிக்கப்பட்டேன். இது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது,” என்று அவர் கூறினார்.

“ஆயினும், வாழ்க்கையின் மற்ற திறன்களின் குறைபாடு ஏற்பட்டது. சரியாகச் சாப்பிடுவதில்லை, பிறருடன் சரியாகப் பழகுவதில்லை. மனிதரை மனிதர் புரிந்துகொள்ளும் திறன் விளையாட விளையாட வளர்வதில்லை. நன்கு யோசிப்பதன் மூலம் வளர்கிறது,” என்றார்.

இணைய விளையாட்டுகளில் சில, தெரியாதவர்களுடன் குழு விளையாட்டுகளாக இயங்குவதால் நன்றாக விளையாடத் தெரியாதவர்களைச் சக விளையாட்டாளர்கள் திரையின் மறைவிலிருந்து தகாத வார்த்தைகளால் புண்படுத்துவதாக இணையப் பாதுகாப்பு நிபுணர் ரூபன் குணசீலன் தெரிவித்தார்.

விளையாட்டுத் தளத்தில் விளையாட்டாளர்கள் தங்களுக்கிடையே குறுஞ்செய்தி அனுப்புவதைக் கட்டுப்படுத்தவேண்டும் என திரு ரூபன் கருதுகிறார்.

“சிலர் விளையாட்டாகவே எடுத்துக்கொள்வார்கள். வேறு சிலர் துவண்டு விளையாடுவதை நிறுத்திவிடுவர். நான் இதில் தினமும் பல மணிநேரம் செலவிடுவதால் என் விளையாட்டுத் திறன்கள் மேம்பட்டிருக்கும். இருந்தபோதும் இதனைக் குறைத்துக்கொள்ள முயல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

திரு ரூபனைப் போல பல மணிநேரம் விளையாடும் உளவியல் மாணவர் ரகுபதி சேதுராம், 26, தாமும் தம் நண்பர்களும் இணைய துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்று கூறினார்.

பதின்ம வயதில் நண்பர்களுடனும் சகோதரர்களுடனும் விளையாடிய திரு சேதுராம், இந்த விளையாட்டுகளில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் ஈடு படக்கூடாது எனக் கருதுகிறார்.

ஒரு நாளில் சராசரியாக நான்கு மணிநேரம் கணினி விளையாட்டில் ஈடுபடுவதாகக் கூறும் திரு சேதுராம், இணைய வெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவம் இப்போது தமக்கு இருப்பதாகக் கூறினார்.

“தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தமாட்டேன். விளையாட்டுக்கு வெளியே அறிமுகமில்லாதவர்களுடன் எச்சரிக்கையுடன் இருப்பேன். அப்படி அறி முகம் நேர்ந்தாலும்கூட ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை அந்நபரைத் தொடர்ந்து கண்காணித்துக் கொள்வேன். இந்த கவனம் இணைய விளையாட்டாளர்களுக்கு நல்லது என்பேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்