வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் (வீவக) ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீட்டுத் திட்டங்களில் ஏழு, ஜூன் மாதம் விற்பனைக்கு விடப்படவிருக்கின்றன.
தஞ்சோங் ரூ வட்டாரத்தில் கேலாங் ஆற்றோரம் இரண்டு திட்டங்கள், ஹாலந்து வில்லேஜில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் முதல்முறையாகக் கட்டப்படும் திட்டம் ஆகியவை அவற்றில் அடங்கும்.
ஜூரோங் வட்டார ரயில் பாதையில் அமையவிருக்கும் தெபான் கார்டன்ஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் கட்டப்படும் குடியிருப்பு, ஈசூனின் செஞ்சாரு பகுதியில் கட்டப்படும் முதல் குடியிருப்பு போன்றவையும் விற்பனைக்கு விடப்படும்.
பிப்ரவரி 21ஆம் தேதி, வீவக அதன் இணையத்தளத்தில் இந்த ஆண்டுக்கான (2024) ஏழு பிடிஓ திட்டங்கள் குறித்த மேல்விவரங்களை வெளியிட்டது.
ஜூரோங் ஈஸ்ட், காலாங்/வாம்போ, குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் ஏறக்குறைய 6,800 வீடுகளை அது விற்பனைக்கு விடவிருக்கிறது.
இரண்டு திட்டங்களின்கீழ், தஞ்சோங் ரூ வட்டாரத்தில் ஏறக்குறைய 2,020 வீடுகள் கட்டப்படும். சிங்கப்பூர் விளையாட்டு நடுவம், மரினா நீர்த்தேக்கம் போன்றவற்றைக் காணும் வகையில் இவை அமையக்கூடும் என்பதால் இவ்வீடுகளை அதிகமானோர் வாங்க விரும்புவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இரு திட்டங்களிலும், ஈரறை ஃபிளெக்ஸி வீடுகள், மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். உணவுக் கடை, உணவகம், கடைகள், பேரங்காடிகள், பாலர் பள்ளி, குடியிருப்பாளர் ஒன்றுகூடல் மையம் போன்றவை 1,400 வீடுகளைக் கொண்ட பெரிய குடியிருப்பிற்கு அருகில் அமைந்திருக்கும்.
கம்போங் ஆராங் ரோட்டில் அமையும் இவ்வீடுகள், ஸ்டேடியம், மவுண்ட்பேட்டன் ரயில் நிலையங்களுக்கு அருகில் அமையுமெனக் கூறப்பட்டது.
குவீன்ஸ்டவுனில் ஹாலந்து டிரைவிலுள்ள நிலப்பகுதியில் 330 ஈரறை ஃபிளெக்ஸி வீடுகளும் நான்கறை வீடுகளும் கட்டப்படும். இவ்வீடுகள் ஹாலந்து வில்லேஜ், போனவிஸ்தா ரயில் நிலையங்களுக்கு அருகில் அமையும்.
ஜூரோங் ஈஸ்ட்டில் 1,070 வீடுகள், ஈசூனில் 1,270 வீடுகள், தெம்பனிசில் 550 வீடுகள், உட்லண்ட்சில் 1,590 வீடுகள் கட்டப்படும் என்று வீவக தெரிவித்தது.