உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக வியாழக்கிழமை காலை சிங்கப்பூருக்கு வந்த பயணிகளில் சிலருக்கு குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
பேருந்துப் பயணிகள் பகுதியில் அவசரகால ஒலி எழுந்ததால் அதிகாரிகள் அதை முடக்க வேண்டியதாயிற்று. காலை 8.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது மக்களின் நீண்ட வரிசை, இரண்டாம் தளத்தில் உள்ள பேருந்துப் பயணிகள் பகுதியில் இருந்து கட்டடத்தின் முதல் தளம் வரை காணப்பட்டது.
தாங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக்கொண்டதைக் காட்டும் புகைப்படங்களைப் பயணிகள் பலரும் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தனர். மியன்மார் கடப்பிதழ் வைத்திருந்தோரை அதிகாரிகள் தேடியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அவசரகால ஒலி காலை 8.30 மணியளவில் முடுக்கிவிடப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். நிலவரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய வேளையில் குடிநுழைவுப் பகுதியில் அதிகாரிகள் செயல்பாடுகளை நிறுத்தினர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் குடிநுழைவு நடைமுறைகள் காலை 9 மணியளவில் வழக்கநிலைக்குத் திரும்பியதாக அவர் கூறினார்.

