நான்கு ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பொதுமக்களை வரவேற்கிறது சிங்கப்பூர் விமானக் காட்சி. இதனைப் பார்வையிட ஏறக்குறைய 60,000 பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொவிட்-19 பரவல் காரணத்தால் 2022ல் வணிகங்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட விமானக் காட்சி, இம்முறை மீண்டும் பெரிய அளவில் திரும்பியுள்ளது.
வரும் சனி, ஞாயிறு (பிப்ரவரி 24, 25) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை, சாங்கி கண்காட்சி மையத்தில் நடக்கும் சிங்கப்பூர் விமானக் காட்சியைக் பொதுமக்கள் காணலாம். மாலை 4.30 மணிக்குமேல் நுழைவு அனுமதி கிடையாது.
வான்சாகசங்கள்
வான்சாகசங்களை சனி, ஞாயிறு காலை 11.30 முதல் 12.15 வரை, மற்றும் பிற்பகல் 2.30 முதல் 3.15 வரை மக்கள் காணலாம்.
சிங்கப்பூர் ஆகாயப்படையின் எஃப்-15எஸ்ஜி, ஏஎச்-64டி போர்விமானங்கள், நான்கு ஒருங்கிணைந்த சாகசங்கள் உட்பட மொத்தம் 12 சாகசங்ளைப் புரியும்.
கொரியாவின் ‘கறுப்புக் கழுகுகள்’, ஆஸ்திரேலியாவின் ‘ரூலட்ஸ்’, இந்தியாவின் ‘சாரங்’ போன்ற குழுக்களின் விமானிகளோடு மாலை 1 முதல் 5 வரை சிறப்பு அங்கங்களில் பொதுமக்கள் உரையாடலாம்.
பிப்ரவரி 24ஆம் தேதியன்று வான்சாகசங்களின் நேரடி ஒளிபரப்பைத் தமிழ் முரசு, தற்காப்பு அமைச்சின் ஃபேஸ்புக் தளங்களிலும் www.singaporeairshowlive.gov.sg இணையத் தளத்திலும் காணலாம்.
விமானக் கண்காட்சி
வான்சாகசங்கள் மட்டுமன்றி, நாள் முழுவதும் விமானக் கண்காட்சியும் இடம்பெறும். பொதுமக்கள் வெவ்வேறு நாடுகளின் விமானங்களைக் கண்டு வியக்கலாம். விமானங்களில் அமர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொள்ள இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள், சிங்கப்பூர் ஆகாயப்படையினரை நேரில் கண்டு உரையாடலாம்.
விமானக் காட்சிக்கான நுழைவுச்சீட்டு வைத்திருப்போருக்கு, சாங்கி கண்காட்சி மையத்திற்கும் எக்ஸ்போ எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்படும்.
சாங்கி கண்காட்சி மையத்தை ஒட்டிய சாலைகளில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பொதுப் போக்குவரத்து தடைபடும்.