சீனப் புத்தாண்டுக் காலத்தில் மின்னிலக்க வழியாக புத்தாண்டு அன்பளிப்பு வழங்குவது (அங் பாவ்) பிரபலமடைந்து வருகிறது.
2023ஆம் ஆண்டைவிட 2024ல் அதிகமான மின்னிலக்க சிறப்பு உறைகள் வழங்கப்பட்டுள்ளன.
பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கூடியது மட்டுமல்லாமல் பரிவர்த்தனை செய்யப்பட்ட பணத்தின் அளவும் கூடியிருப்பது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வங்கிகளிடம் விசாரித்ததில் தெரிய வருகிறது.
பிப்ரவரி 9 முதல் 12 வரையில் கியூஆர் குறியீடு மற்றும் ’இகிஃப்ட்’ எனும் மின்னிலக்கப் பரிசுகள் மூலமாக 17.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள அங் பாவ் வழங்கப்பட்டுள்ளதாக டிபிஎஸ் தெரிவித்தது. இது, ஆண்டு அடிப்படையில் பார்த்தால் 30 விழுக்காடு அதிகமாகும்.
ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரையில் மின்னிலக்க பரிசுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு கூடியிருக்கிறது.
கியூஆர் குறியீடு அங் பாவ் என்பது கியூஆர் குறியீடு உள்ள அட்டைகளாகும். இதனைப் பெறுவோர் கியூஆர் குறியீட்டை வருடி முன்கூட்டியே போடப்பட்டுள்ள தொகையை மீட்டுக்கொள்ளலாம். ‘பேலா’ செயலி வழியாகவும் மின்னிலக்கப் பரிசுகளை வாடிக்கையாளர்கள் அனுப்பி வைக்கின்றனர்.
சீனப் புத்தாண்டின் முதல் மூன்று மாதங்களில் இ-அங்பாவ் அனுப்பியவர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாக ஓசிபிசி வங்கி கூறியது.
பண்டிகைக் காலத்தின் முதல் 15 நாள்களில் அங் பாவ் அனுப்பப்பட்ட மொத்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அவ்வங்கி மதிப்பிட்டுள்ளது.
யுஓபி வங்கியில் பிப்ரவரி 9 முதல் 15 வரை மின்னிலக்க சிவப்பு உறை மூலமாக அனுப்பபட்ட மொத்த தொகை ஆண்டு அடிப்படையில் 60 விழுக்காடு கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பேநவ்’ பரிவர்த்தனைகள் மற்றும் அங் பாவ் அனுப்பிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது என்றும் யுஓபி தெரிவித்தது.