பிடாடாரி குடியிருப்புப் பகுதியில் உள்ள நிலத்தடி பேருந்து நிலையம் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் தயாராகவில்லை.
உட்லே பேருந்து நிலையம் 2019ஆம் ஆண்டில் தயாராகிவிடும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அது இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய பொறியியல் சவால்கள் மற்றும் கொவிட்-19 நெருக்கடி நிலையால் உட்லே வில்லேஜ் ஒருங்கிணைந்த மேம்பாட்டில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நிலையம் முழுமையடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) கூறியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுடன் இணைக்கப்படும் முதல் நிலத்தடி பேருந்து நிலையம் எனும் பெருமை உட்லே பேருந்து நிலையத்தைச் சேரும்.
அதற்கான கட்டுமானப் பணிகள் 85 விழுக்காடு நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு இடையூறுகள் இல்லாவிடில் பேருந்து நிலையம் இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்று வீவகவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
உட்லே வில்லேஜ் ஒருங்கிணைந்த மேம்பாடு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு விடப்பட்டது.
அதில் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள 330 வீவக வீடுகள், உணவு அங்காடி நிலையம், உட்லே எம்ஆர்டி நிலையம் ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
உட்லே குடியிருப்பாளர்களில் பலர் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கள் வீட்டு சாவியைப் பெற்றுக்கொண்டனர்.
தொடரும் கட்டுமானப் பணிகள் காரணமாக ஏற்படும் சத்தம், தூசு, கூரையுள்ள நடைபாதைகள் போதிய அளவில் இல்லாதது ஆகியவை குறித்து அவர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.
பிடாடாரி வட்டாரத்தில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான, அதாவது 8,872 வீடுகளில் 6,418 வீவக வீடுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டதாக வீவகவின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.
எஞ்சியுள்ள 2,454 வீடுகள் 2025ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.