திறன் மேம்பாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் வட்டியில்லா ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கடன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளி கட்சித் தலைவருமான பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 26) அன்று நாடாளுமன்றத்தில் நடந்த வரவுசெலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தின்போது அந்த கருத்தை திரு பிரித்தம் முன்வைத்தார்.
அண்மைய வரவு செலவுத் திட்டத்தில் ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கணக்கில் கூடுதல் பணம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது முக்கியமான ஒன்று, இருப்பினும் வட்டியில்லா ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கடன் திட்டம் ஊழியர்களுக்கு நன்கு உதவும் என்றார் பிரித்தம் சிங்.
2024 வரவு செலவுத் திட்டத்தை தனது கட்சி ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் வரும் வேலைகளுக்கு ஊழியர்களை தயார்ப்படுத்திக்கொள்ள திறன்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்வது முக்கியமானது, இருப்பினும் இந்த திட்டங்கள் மேம்பட வேண்டும் என்றார் அவர்.
40 மற்றும் 40க்கும் அதிகமான வயதுடைய சிங்கப்பூரர்கள் அவர்களுது ‘ஸ்கில்ஸ்ஃபியூச்சர்’ கணக்கில் கூடுதலாக 4,000 வெள்ளி நிரப்பப்படும் என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யும் போது அறிவித்தார்.
கூடுதலாக நிரப்பப்படும் தொகை மூலம் சிங்கப்பூரர்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ பட்டயக் கல்விப் பாடங்கள் போன்றவற்றை மேற்கொள்ள முடியும்.