சிங்கப்பூரில் இதுவரை இல்லாத புதிய நடவடிக்கையாக பொதுப் போக்குவரத்து நிறுவனம், கார்ப் பகிர்வு நிறுவனத்துடன் சேர்ந்து எம்ஆர்டி பயணிகளுக்கு மேம்பட்ட வசதியை வழங்கவிருக்கிறது.
பிப்ரவரி 26ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் ஆகப்பெரிய பொதுப் பேருந்து நிறுவனமும் வடகிழக்கு, டௌன்டவுன் எம்ஆர்டி வழித்தடங்களையும் நடத்தும் எஸ்பிஎஸ் டிரான்சிட், அதற்காக கார்ப்பகிர்வு நிறுவனமான ‘கெட்கோ’வுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மூவாண்டு கார்ப் பகிர்வு நிறுவனமான கெட்கோ, 3,000 கார்களுடன் கார்ப் பகிர்வு சேவையை வழங்கி வருகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் இரண்டு எம்ஆர்டி வழித்தடங்கள் வழியாக ஐம்பது எம்ஆர்டி நிலைங்கள், அதன் பேருந்து நிலையங்கள் அருகில் பத்து நிமிட தொலைவில் ஏறக்குறைய 400 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
இதனால் எம்ஆர்டி, பேருந்து நிலையங்களுக்கு செல்லும்போதும் திரும்பும்போதும் கார்ப் பகிர்வு கார்களை பயணிகள் பயன்படுத்தலாம்.
புதிய திட்டம் குறித்துப் பேசிய எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம், கெட்கோவுடன் போட்டுள்ள ஒப்பந்தம், எங்களுடைய பேருந்து, ரயில் பயண வசதிகளை மேலும் எளிதாக்குகிறது என்றார்.
பயணிகளின் முதல் அல்லது கடைசி நேரப் பயணத்தை எளிமையாக்க கடந்த ஆண்டு (2023) ‘எனிவீல்’ சைக்கிள் பகிர்வுத் திட்டத்தை எஸ்பிஎஸ் டிரான்சிட் அறிமுகப்படுத்தியது.
“போக்குவரத்து என்பது தொடர்புகள், வசதிகளை எளிமையாக்குவதாக இருக்க வேண்டும்,” என்றார் ஜெஃப்ரி சிம்.
கெட்கோ கார்களைப் பயன்படுத்துவதற்கு தூரம், நேரத்தின் அடிப்படையில் கட்டணம் மணிக்கு $6 முதல் $10 வரை இருக்கும்.
கெட்கோ தலைமை நிர்வாகியான டோ டிங் ஃபெங், சிங்கப்பூரின் குறைவான கார்களைக் கொண்டிருக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய படி என்று குறிப்பிட்டார்.