அரசாங்க அமைப்புகளால் ஜிஎஸ்டி தவறாக வசூலிக்கப்பட்டதற்கு அதற்குரிய சட்டத்திற்கான விளக்க வேறுபாடுகளே காரணம்.
ஜிஎஸ்டி வசூலிக்கக் கூடாத இடங்களில் ஒழுங்குமுறைக் கட்டணங்கள் குறித்து தெளிவான விளங்கக்கூடிய வகையில் விதிமுறைகளையும் செயல்முறைகளையும் அரசாங்கம் எளிமைப்படுத்துவதோடு தெளிவுபடுத்தும்.
இத்தகைய கட்டணங்களுக்கான ஜிஎஸ்டியைத் தெளிவுபடுத்தும் வகையில் ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை நிதி அமைச்சு விரைவில் தாக்கல் செய்வதுடன் ஜிஎஸ்டி வசூலிக்கப்படக் கூடாத ஒழுங்குமுறைக் கட்டணங்களின் பட்டியலையும் பரிந்துரைக்கும்.
எந்தெந்தக் கட்டணங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இது தெளிவாக்கும். இரண்டாம் நிதி அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கள்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்றக் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது இதனைத் தெரிவித்தார்.
ஆளுகை மற்றும் ஒருமைப்பாட்டின் உயர் தரத்தை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அதன் செயல்முறைகளைத் தொடர்ந்து மறுஆய்வு செய்து மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
எந்தவொரு அரசாங்கக் கட்டணத்திற்கும் தவறாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டிக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் வணிகங்கள் அல்லது தனிநபர்கள் ஜிஎஸ்டி கட்டுப்பாட்டாளரிடம் ஆட்சேபனை தெரிவிக்கலாம் அல்லது ஜிஎஸ்டி மறுஆய்வு வாரியத்தில் முறையீடு செய்யலாம் என்றும் திரு சீ கூறினார்.