போதைப்பொருள் உட்கொண்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக பிணையில் விடுவிக்கப்பட்ட பங்ளாதேஷ் நாட்டவர் இருவர், பிப்ரவரி 25ஆம் தேதி கேலாங்கில் ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து $300ஐ கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
மியா ஷவன், 28, அகமது முகமது ரியாஸ், 29, இருவர் மீதும் செவ்வாய்க்கிழமை தலா ஒரு கொள்ளை குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டது.
லோரோங் 13, லோரோங் 15 கேலாங்கிற்கு இடைப்பட்ட சந்துப் பகுதியில் பிப்ரவரி 25ஆம் தேதி காலை 5.30 மணியளவில் அவ்விருவரும் காணப்பட்டனர். அங்கு ஆடவர் ஒருவரைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து $300ஐ கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காலை 5.35 மணியளவில் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை அறிக்கை தெரிவித்தது. காயமடைந்த அந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.
பிடோக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அவ்விரு சந்தேக ஆடவர்களின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர். அவ்விருவரும் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 25ஆம் தேதி மியாவுடன் சேர்ந்து கொள்ளையடித்தபோது, அகமது $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
மியாவின் வழக்கு விசாரணைக்கு முந்திய கலந்துரையாடல் புதன்கிழமை நடத்தப்படும். அகமதின் கலந்துரையாடல் மார்ச் 1ஆம் தேதி இடம்பெறும்.