சமூக ஊடகமான ‘டிக்டாக்’இல் உரிமம இல்லாமல் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழிலை விளம்பரப்படுத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 43 வயது பணிப்பெண் மீது பிப்ரவரி 28ஆம் தேதி (புதன்கிழமை) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையே 10க்கும் அதிகமான புகார்கள் அந்தப் பணிப்பெண்ணின் ‘டிக்டாக்’ கணக்கு குறித்து வந்ததாகக் காவல்துறை பிப்ரவரி 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கூறியது.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அப்பணிப்பெண்ணைக் காவல்துறை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்ததாகவும் அது கூறியது.
அப்பணிப்பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் குறித்த விவரங்களைக் காவல்துறை தெரிவிக்கவில்லை.
உரிமம் இல்லாமல் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழிலுக்கு உதவிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 300,000 வெள்ளி அபராதமும் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
கடன் முதலை நடவடிக்கைகள் குறித்துத் தெரிந்தால், பொதுமக்கள் 999 என்ற எண்ணில் காவல்துறையையோ 1800-924-5664 என்ற அவசர தொலைபேசி எண்ணையோ அழைத்துத் தகவல் தெரிவிக்கலாம்.