சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் ஏர்பஸ் ராணுவப் போக்குவரத்து விமானத்தில் ஏற சீனாவைச் சேர்ந்த சில பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் பிப்ரவரி 24ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
இதுகுறித்து ஏர்பஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் 38 விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் ஜெர்மானிய விமானப் படைக்குச் சொந்தமான அந்த ஏர்பஸ் விமானமும் அடங்கும்.
அந்த விமானத்தில் ஏற சீனாவைச் சேர்ந்த பார்வையாளர்களும் வரிசையில் காத்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த விமானத்தின் சிப்பந்தி ஒருவர் அவர்களைத் தடுத்து நிறுத்தி விமானத்தில் ஏறவிடவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
சம்பவம் குறித்து தெரியவந்ததும், அந்த விமானத்தில் ஏற அனைத்துப் பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கும்படி ஜெர்மானிய விமானப் படையிடம் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது என்று ஏர்பஸ் நிறுவனம் கூறியது.

