பலதுறைத் தொழிற்கல்லூரியில் பகுதிநேரமாக பட்டயக் கல்வி மேற்கொள்ளும் 40 வயது, அதற்கும் மேற்பட்ட வயதுடைய பணியிடைக்கால ஊழியர்கள், $4,000 ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகை நிரப்புதலுக்குப் பிறகு வெறும் $40 செலுத்துவர்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியைப் பொறுத்தவரை, மே 1ஆம் தேதி தொடங்கும் இப்புதிய ஊக்குவிப்புத் திட்டம், வழக்கமான பகுதிநேர பட்டயக் கல்விக்கான ஒட்டுமொத்த கட்டணங்களையும் கிட்டத்தட்ட ஈடுசெய்ய போதுமானதாக இருக்கும்.
சிறப்புப் பட்டயக் கல்வி பயில்வோர் $20க்கும் குறைவாகவே செலுத்த வேண்டியிருக்கும். காப்புறுதி, இதர கட்டணங்களுக்கான தொகையை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைக் கொண்டு செலுத்த இயலாது.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வர்த்தக நடைமுறை (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) துறையில் தற்போது பகுதிநேரமாக பட்டயம் பயிலும் 40 வயது சிங்கப்பூரர் ஒருவர், கட்டணக் கழிவுகளுக்குப் பிறகு $2,000க்கும் குறைவாக செலுத்த வேண்டும். அதேபோல, தரவுப் பகுப்பாய்வில் சிறப்புப் பட்டயம் பயில்வோருக்கான கட்டணம் ஏறக்குறைய $900.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி தொடர் கல்வி, பயிற்சிக் கழக இயக்குநரான டாக்டர் கிறிஸ்டி சுங், இத்தகைய பாடத் திட்டங்களுக்கான செலவுகளை ஈடுசெய்ய இந்த $4,000 நிரப்புதொகை உதவுவதாகக் குறிப்பிட்டார்.
முழுநேரமாக இரண்டாவது பட்டயக் கல்வியை மேற்கொள்வோருக்கு இந்த நிதியாதரவு நீட்டிக்கப்படுகிறது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக, பணியிடைக்கால ஊழியர்கள் பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், கலைக் கழகங்கள் ஆகியவற்றில் 2025ஆம் கல்வியாண்டில் இருந்து முழுநேரமாக மற்றொரு பட்டயக் கல்வி பெறுவதற்கான கட்டணக் கழிவு கிடைக்கப்பெறும்.
நாற்பது, அதற்கும் மேற்பட்ட வயதுடையோர் 2025லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முழுநேர பாடங்களில் சேரும்போது, 24 மாதங்கள் வரை மாதாந்தர பயிற்சி படித்தொகையாக $3,000 வரை வழங்கப்படும்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கற்கும் பெரியவர்களில் 40 வயதுக்கு மேற்பட்டோர் நான்கில் ஒரு பங்கிற்குமேல் வகிப்பதாக டாக்டர் சுங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற மாணவர் சேர்க்கையில், 30 வயதுக்குக்கீழ் உடையோரும் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றனர்.