போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் சென்ற ஆண்டுக்கான நிகர லாபம் $69.1 மில்லியனுக்கு உயர்ந்துள்ளது. இது 1.5 விழுக்காட்டு உயர்வாகும்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் அந்நிறுவனத்தின் ஆக அதிக லாபம் இது.
2023 டிசம்பர் 31ல் முடிவடைந்த முழு ஆண்டுக்கான வருவாய் 0.8 விழுக்காடு அதிகரித்து $1.52 பில்லியன் ஆனதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
அந்நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்கும் போக்குவரத்துப் பெருநிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, சிங்கப்பூர் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) வருவாய் நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்தது.
மொத்த செலவு 1.1 விழுக்காடு அதிகரித்து $1.45 பில்லியனைத் தொட்டது என்றும் எரிபொருள் மற்றும் எரிசக்தி விலை ஏற்றம் அதற்குக் காரணம் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.
எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மூலமான வருவாய் 0.4 விழுக்காடு அதிகரித்து $1.47 பில்லியனைத் தொட்டது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப்ரி சிம், “பெருந்தொற்றில் இருந்து சிங்கப்பூர் வழக்கநிலைக்குத் திரும்பி இருக்கும் வேளையில், பயணங்களின் எண்ணிக்கை மீண்டிருப்பதைக் காண்கிறோம்,” என்றார்.