நால்வரை ஏமாற்றி ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்தவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நால்வரும் 2018ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளியான சியூ முய் லாங், முதலீட்டு மோசடிகளில் ஈடுபட்டார். அவரிடம் ஏமாந்தவர்கள் ஏறக்குறைய 694,000 வெள்ளியைப் பறிகொடுத்தனர். தான் பறித்ததில் 335,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை 59 வயது சியூ பாதிக்கப்பட்டோரிடம் திரும்பக் கொடுத்துவிட்டார்.
தன்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை சியூ ஒப்புக்கொண்டார். 886,000 வெள்ளிக்கு மேற்பட்ட தொகையை ஏமாற்றிப் பறித்ததன் தொடர்பிலான இரண்டு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 27) சியூவுக்கு ஐந்தாண்டுகள் 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பளித்தபோது மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ப்பட்டன.
சியூ, 2011ஆம் ஆண்டில் அழகுப் பராமரிப்பு அலங்காரச் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதாக அரசாங்க துணை வழக்கறிஞர் இங் ஜூன் கய் தெரிவித்தார். அந்நிறுவனம் எதிர்பார்த்தபடி இயங்காததைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் உரிமமின்றி கடன் வழங்கும் ஒருவரை நாடினார். லூக்கஸ் என்ற அந்நபர், சியூவுக்குக் குறிப்பிடப்படாத தொகையைக் கடனாக வழங்கினார்.
பின்னர் தன்னுடன் சேர்ந்து கடன் முதலீட்டு வர்த்தகத்தில் ஈடுபடுவதில் சியூவுக்கு விருப்பமா என்று லூக்கஸ் கேட்டார். லூக்கசின் கடன் முதலீட்டு நிறுவனம் கிங்ஸ் கிரெடிட் என்றழைக்கப்பட்டது.
தான் முதலீடு செய்த தொகையும் 10 விழுக்காடு லாபமும் 10 வாரங்களுக்குள் கிடைக்கும் என்று சியூவிடம் தெரிவிக்கப்பட்டது. விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் சியூ, பணம் முதலீடு செய்யுமாறு வாடிக்கையாளர்களையும் நண்பர்களையும் நாடியதாக அரசாங்கத் துணை வழக்கறிஞர் இங் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் சியூவும் லூக்கசால் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது.