வரலாற்றில் இதுவரை கண்டிராத சரிவை சிங்கப்பூரின் ஒட்டுமொத்த குழந்தைப் பிறப்பு விகிதம் (டிஎஃப்ஆர்) சந்தித்துள்ளது.
2023ஆம் ஆண்டில் டிஎஃப்ஆர் 0.97 ஆக இருப்பதை ஆரம்பகட்ட மதிப்பீடுகள் காட்டுவதாக நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 28ஆம் தேதியன்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
குழந்தைப் பிறப்பு விகிதம் ஒன்றுக்குக்கீழ் குறைந்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இது, மாற்று விகிதமான 2.1, அதாவது இறப்போரின் விகிதத்தை ஈடுகட்டும் பிறப்பு விகிதத்தைக் காட்டிலும் மிகக் குறைவே.
மக்கள்தொகை விவகாரம் தொடர்பாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய குமாரி இந்திராணி ராஜா, டிஎஃப்ஆர் குறித்து விளக்கமளித்தார்.
கருவுறும் திறனுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் பிறக்கக்கூடிய சராசரி குழந்தை எண்ணிக்கையானது டிஎஃப்ஆர் எனக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்ந்து சரிந்து வருவதாக அமைச்சர் இந்திராணி கூறினார்.
இது, 2021ஆம் ஆண்டில் 1.12ஆகவும் 2022ல் 1.04ஆகவும் இருந்தது.
அண்மைய புள்ளிவிவரத்தின் அடிப்படையில், அனைத்துலக அளவில் ஆகக் குறைந்த குழந்தைப் பிறப்பு விகிதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூரும் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பட்டியலில், 0.72 என்ற விகிதத்துடன் தென்கொரியா முதலிடத்தில் உள்ளது.
தேசிய மக்கள்தொகை மற்றும் திறன் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் குமாரி இந்திராணி ராஜா, 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர்வாசிகள் மத்தியில் 26,500 திருமணங்கள் நடந்ததாகக் கூறினார்.
அத்துடன் 2023ல் 30,500 சிங்கப்பூர்வாசிகள் பிறந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர், தொடர்ச்சியாகக் குறைந்த பிறப்பு விகிதம், மூப்படையும் விகிதம் ஆகிய இரட்டை மக்கள்தொகை சவால்களைச் சந்தித்துவருவதாக அவர் சுட்டினார்.
ஒருசில தம்பதியரின் திருமணத்துக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டங்களுக்கும் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் தடங்கலாக இருந்தது. இதுபோன்ற தற்காலிகக் காரணங்களை சிங்கப்பூரின் குறைந்த பிறப்பு விகிதத்திற்குத் தொடர்புபடுத்தினார் அமைச்சர் இந்திராணி ராஜா.
வாழ்க்கையில் முன்னுரிமை பெறும் அம்சம் குறித்து தலைமுறைகளிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தை இந்தச் சரிந்து வரும் எண்ணிக்கை காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், டிஎஃப்ஆர் சரிவு சிங்கப்பூரின் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சொன்னார்.
“பிறப்பு விகிதம் குறைவதால், ஊழியரணியும் சுருங்கும். நாம் கொண்டுள்ள முனைப்பைத் தக்கவைத்துக்கொள்ள, அனைத்துலக வர்த்தகங்களை ஈர்க்க, அடுத்த தலைமுறைக்கு வாய்ப்புகளை உருவாக்க தொடர்ந்து அதிக சவால்மிக்கதாக இருக்கும்,” என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.
சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கம் 2023ஆம் ஆண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்தது.