கூடுதல் தேவைகளுடையோர், குறிப்பாக குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் உதவி அவர்கள் செலுத்தும் வரிகளைக் காட்டிலும் அதிகம் என்பதை சிங்கப்பூரின் நியாயமான, முற்போக்குடைய நிதி அமைப்புமுறை உறுதிப்படுத்துவதாகத் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 16ஆம் தேதியன்று தாம் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்ட அறிக்கை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் தொடர்பில் திரு வோங் பிப்ரவரி 28ஆம் தேதி பேசினார்.
அரசாங்கத்தின் நீண்டகால, விவேகமான அணுகுமுறையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக அதன் செலவினம் இருப்பதுடன் வரிச் சுமையையும் குறைவாக வைத்திருக்க முடிந்தது என்றார் அவர்.
குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குக் கிட்டும் பலனுக்கு ஈடான வரி விகிதம் தொடர்பில் பிரிட்டன், பின்லாந்து போன்ற முன்னேற்றமடைந்த நாடுகளைவிட சிங்கப்பூர் சிறப்பாகச் செய்துள்ளது என்று நிதி அமைச்சராக உள்ள திரு வோங் தெரிவித்தார்.
‘பிஇபிஎஸ்’ அதாவது ‘லாப வரிக் குறைப்பு, லாபத் தொகைப் பெயர்ப்பு உத்திமுறை 2.0’ ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்து வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது அமைச்சர்கள் பலர் தெளிவு நாடினர்.
‘பிஇபிஎஸ்’ உத்தியால் பன்னாட்டு நிறுவனங்கள், அவை செயல்படும் இடத்தில் இருந்து பெறும் லாபத்தை, வரி இல்லாத அல்லது வரி விகிதம் குறைவாக உள்ள இடத்திற்கு மாற்றிவிட இயலும். நிறுவனத்திற்குப் பொருளியல் நடவடிக்கை அதிகம் இல்லாத அல்லது முற்றிலும் இல்லாத ஓர் இடத்திற்கும் மாற்றிவிட முடியும்.
இத்திட்டத்தின் மூலம் சிங்கப்பூருக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் $5 பில்லியன் முதல் $11 பில்லியன் வரையிலான வருவாய் ஆதாயம் கிடைக்கும் என்று அமைச்சர் வோங் கூறினார்.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் ஆகியவற்றைக் கருதி போட்டித்தன்மை அதிகரிக்கும் உலகில் பாதுகாப்பு அளிப்பதற்கு ஆவன செய்வதே முக்கியம் என்று சுட்டினார் திரு வோங்.