பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) 2030ஆம் ஆண்டு வரை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய அவர், “இப்போதிருந்து 2030ஆம் ஆண்டு வரை நாம் நல்ல நிலையில் இருப்போம்,” என்றார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸல் புவா எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் திரு வோங் இவ்வாறு தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டு வரை இனியும் ஜிஎஸ்டியை உயர்த்துவதற்கான அவசியம் ஏதும் உள்ளதா என்று அவர் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த திரு வோங், “ஜிஎஸ்டியை 7 விழுக்காட்டிலிருந்து படிப்படியாக 9 விழுக்காட்டுக்கு உயர்த்தியது, வருவாய்க்கும் செலவுக்கும் இடையில் உள்ள நிதிப் பற்றாக்குறையை நிரப்புவதற்காகத்தான்.
“அந்த வகையில், 2030ஆம் ஆண்டு வரையிலான இடைவெளியை நாம் நிரப்பிவிட்டோம். எனவே, அதுவரை ஜிஎஸ்டியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது,” என்றார்.